கர்நாடகா: கொரோனா கட்டுப்பாடுகளை மீறி மேகதாது அணைக்காக 11 நாள் பாதயாத்திரையை தொடங்கியது காங்.
பெங்களூரு: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணையை கட்ட வலியுறுத்தி கர்நாடகா மாநில காங்கிரஸ் கட்சியினர் இன்று 11 நாட்கள் பாதயாத்திரையை தொடங்கி உள்ளனர். கொரோனா கால கட்டுப்பாடுகளை மீறி இந்த பாதயாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.

மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்பது கர்நாடகாவின் நிலைப்பாடு. ஆனால் காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டுவதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் கர்நாடகாவின் மேகதாது அணை கட்டும் முயற்சிகளைக் கடுமையாக எதிர்த்து வருகின்றன. மத்திய அரசு இத்திட்டத்துக்கு அனுமதி தரக்கூடாது எனவும் தமிழகம் வலியுறுத்தி வருகிறது.

ஆனால் மேகதாது அணை விவகாரத்தை அரசியல் ஆதாயத்துக்காக கர்நாடகா காங்கிரஸ் கையில் எடுத்துள்ளது. இத்தனைக்கும் கர்நாடகாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் இதனை பொருட்படுத்தாமல் 168 கிலோ மீட்டர் தொலைவுக்கான 11 நாட்கள் பாத யாத்திரையை காங்கிரஸ் கட்சியினர் தொடங்கி உள்ளனர். கர்நாடகா காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சிவக்குமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா, ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் இந்த பாத யாத்திரையைத் தொடங்கி வைத்தனர்.

முன்னதாக பாதயாத்திரை வெற்றிக்காக வழிபாட்டு தலங்களில் சிறப்பு வழிபாடு நடத்தினார் சிவக்குமார். கனகபுராவில் கோவில், தேவாலயங்கள், மசூதி ஆகியவற்றில் சிவக்குமார் வழிபாடு நடத்தினார். இந்த யாத்திரை தொடர்பாக சிவக்குமார் கூறுகையில், கர்நாடகா மக்களுக்காக இந்த பாதயாத்திரை நடத்தப்படுகிறது. காவிரி நீர் மீதான கர்நாடகாவின் உரிமையை நிலைநாட்டுவதற்காக நடைபயணம் மேற்கொள்கிறோம். கொரோனா கால அனைத்து கட்டுப்பாடுகளையும் பின்பற்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இந்த பாதயாத்திரை நடத்தப்படுகிறது என்றார்.
இருப்பினும் இது அரசியல் நாடகம் என பாரதிய ஜனதா கட்சி விமர்சித்துள்ளது. கர்நாடகா உள்துறை அமைச்சர் அரக ஜனநேந்திரா கூறுகையில், கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பாதயாத்திரை நடத்துவதை காங்கிரஸ் தலைவர்கள் பரிசீலனை செய்ய வேண்டும். கொரோனா கால கட்டுப்பாடுகளை யார் மீறினாலும் அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications