மோடி மாடல்.. துணை முதல்வரான உடனே டிகே சிவக்குமார் செய்த முதல் செயல்! விதான சவுதாவில் நெகிழ்ச்சி
பெங்களூர்: கர்நாடகா துணை முதல்வராக இன்று டிகே சிவக்குமார் பதவியேற்றார். இதையடுத்து அவர் கர்நாடகா சட்டசபை கட்டமான விதான சவுதாவுக்கு சென்றார். அப்போது திடீரென்று யாரும் எதிர்பாராத வகையில் பிரதமர் மோடியை போல் செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. 224 தொகுதிகளில் 135 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது. பாஜக 66 இடங்களில் மட்டுமே வென்று ஆட்சியை பறிகொடுத்தது. ஜேடிஎஸ் 19 இடங்களிலும் மற்றவர்கள் 4 இடங்களிலும் மட்டுமே வென்றனர்.

இதனால் காங்கிரஸ் தனித்து ஆட்சியை பிடித்தது. கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டனர். இன்று பதவியேற்பு விழா பெங்களூர் கன்டீரவா மைதானத்தில் நடந்தது.
மதியம் 12.30 மணிக்கு துவங்கிய விழாவில் சித்தராமையா முதல்வராகவும், டிகே சிவக்குமார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர். அதன்பிறகு 8 பேர் அமைச்சர்கள் பொறுப்பேற்றனர். இவர்களுக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து சித்தராமையா, டிகே சிவக்குமார், அமைச்சர்கள் என அனைவரும் கர்நாடகா சட்டசபை கட்டடமான விதான சவுதாவுக்கு வந்தனர்.
சித்தராமையா மற்றும் அமைச்சர்கள் அனைவரும் விதான சவுதாவின் தங்களின் அறைக்கு நோக்கி சென்றனர். இந்த வேளையில் டிகே சிவக்குமார் விதான சவுதாவுக்குள் நுழையும் படிக்கட்டில் திடீரென்று நின்றார். மேலும் அவர் சட்டென குனிந்து விதான சவுதாவின் படிக்கட்டில் சாஸ்டாங்கமாக விழுந்து தொட்டு வணங்கி உள்ளே சென்றார். இது அங்கிருந்தவர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பிரதமர் மோடி முதல் முறையாக நாடாளுமன்றத்துக்கு சென்றபோது நாடாளுமன்ற படிக்கட்டுகளை தொட்டு வணங்கினார். அதேபோல் துணை முதல்வரான டிகே சிவக்குமார் விதான சவுதா படிக்கட்டுகளை வணங்கினார்.

டிகே சிவக்குமார் கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவராக உள்ளார். இந்த தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவதில் முக்கிய பங்காற்றினார். குறிப்பாக ஜேடிஎஸ் கட்சி செல்வாக்காக உள்ள ஓல்டு மைசூர் மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஒக்கலிகர் சமுதாய வாக்குகளை பெற்று கொடுத்தார். இந்நிலையில் தான் கர்நாடகா முதல்வர் பதவிக்கு சித்தராமையாவுடன், டிகே சிவக்குமாரும் ரேஸில் இருந்தார்.
ஆனாலும் காங்கிரஸ் மேலிடம் டிகே சிவக்குமாருக்கு பதில் சித்தராமையாவுக்கே முதல்வர் பதவியை வழங்கியது. டிகே சிவக்குமாருக்கு துணை முதல்வர் பதவியை காங்கிரஸ் மேலிடம் ஒதுக்கியது. இந்த தேர்தலில் டிகே சிவக்குமார் தனது சொந்த தொகுதியான ராமநகர் மாவட்டம் கனகபுராவில் போட்டியிட்டார். இவர் 1.22 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக அமைச்சர் ஆர் அசோக் உள்பட அனைவரையும் டெபாசிட் இழக்க செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications