கர்நாடகத்தில் பாஜக 130 தொகுதிகளில் வெல்லும்- அமித்ஷா நம்பிக்கை
கர்நாடகத்தில் பாஜக 130 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்தார்.
பெங்களூர்: கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக 130 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் நாளை மறுதினம் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தீவிரமாக பிரசாரம் செய்தன.
சுமார் 225 தொகுதிகளை கொண்ட நிலையில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது. முன்னதாக பெங்களூரில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில் வரும் சட்டசபை தேர்தலில் பாஜக 130 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும். மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதில் சித்தராமையாவின் காங்கிரஸ் அரசு தோல்வியை சந்தித்துவிட்டது.
கர்நாடகத்தில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த தொண்டர்கள் 20-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். குற்றவாளிகளை கைது செய்ய காங்கிரஸ் கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
விவசாயிகளுக்காக கர்நாடக காங்கிரஸ் அரசு என்ன செய்துள்ளது. போலி வாக்காளர் அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வந்தன. காங்கிரஸ் கட்சி ஜனநாயகமற்ற வழியில் வெற்றி பெற முயற்சிக்கிறது என்றார் அமித்ஷா.