அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்.. தேர்தலுக்காக கன்னட மொழிபெயர்ப்பு கருவியை பயன்படுத்தும் மோடி
கர்நாடகா தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி கன்னட மொழிப்பெயர்ப்பு கருவியை பயன்படுத்தி வருகிறார்.
பெங்களூர்: கர்நாடகா தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி கன்னட மொழிப்பெயர்ப்பு கருவியை பயன்படுத்தி வருகிறார். அவர் ஹிந்தியில் பிரச்சாரம் செய்வதை அந்த கருவி மக்களுக்கு கன்னடாவில் ஸ்பீக்கர் மூலம் பேசும்.
கர்நாடக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. வரும் மே 12ம் தேதி வாக்குப்பதிவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 224 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்ய களத்தில் இறங்கியுள்ளது.

இந்த நிலையில் கர்நாடகா தேர்தலுக்காக பிரதமர் மோடி இன்று கர்நாடகா வந்து தன்னுடைய பிரச்சாரத்தை தொடங்கி இருக்கிறார். நேற்று வந்த அவர் மொத்தம் 5 நாட்கள் இவர் பிரச்சாரம் செய்வார். 15 இடங்களில் மேடை போட்டு இவர் பேசுவார் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் கர்நாடகாவில் பிரச்சாரம் செய்யும் மோடி, முதல்முறையாக கன்னட மொழிபெயர்ப்பு கருவியை பயன்படுத்தி இருக்கிறார். நேற்று சந்தேமாரஹள்ளி என்ற இடத்தில் இருந்து மோடி பேசிய எல்லா மேடைகளிலும் அவர் கன்னட மொழிபெயர்ப்பு கருவி மூலம் மட்டுமே பேசினார். இது கன்னட மக்களுக்கு பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவர் ஹிந்தியில் பேசுவதை அந்த மொழிப்பெயர்ப்பு கருவி அப்படியே கன்னடத்தில் மொழிபெயர்த்து ஸ்பீக்கர்கள் மூலம் பேசும். ஆனால் இது நாம் பேசும் அளவிற்கு வேகமாக பேசாது. அதேபோல் மக்களுக்கு, புரியும் வகையில் இது அலங்கார வார்த்தைகளை பயன்படுத்தாது. இதை ராகுல் காந்தி இரண்டு மாதமாக பயன்படுத்தி வருகிறார். அவர் எல்லா தொகுதியிலும் கர்நாடகாவில் இதை வைத்து பேசியுள்ளார்.
ஹிந்தியை திணிக்க நினைக்கும் மத்திய அரசு இப்போது கன்னட மொழிக்காக மொழிபெயர்ப்பு கருவி பயன்படுத்தும் அளவிற்கு இறங்கி வந்து இருப்பது, அங்கு மொழிக்காக தீவிரமாக பாடுபட்டவர்களுக்கு வெற்றி என்று பார்க்கப்படுகிறது. இது மக்கள் மத்தியில் பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல்முறையாக எங்கேயும் மொழிபெயர்ப்பு கருவி பயன்படுத்தாத மோடி, கர்நாடக தேர்தலுக்காக பயன்படுத்தி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications