அரசு பள்ளிகளுக்கு சாக்பீஸ் வாங்ககூட காசு தராத கர்நாடக அரசு! விடுமுறை அறிவிக்க ஆசிரியர்கள் திட்டம்
பெங்களூர்: சாக்பீஸ் வாங்க கூட பணம் ஒதுக்காத கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அரசு பள்ளிகளை மூன்று நாள் முழுவதுமாக அடைத்து போராட்டம் நடத்த ஆசிரியர் சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
இதுபற்றி கர்நாடக மாநில ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் சங்க தலைவர் பசவராஜ் குரிகர் கூறியதாவது: கர்நாடகத்தில் 46 ஆயிரம் அரசு பள்ளிகள் செயல்படுகின்றன. வருடாந்திர பராமரிப்பு செலவுக்காக பள்ளிகளுக்கு தலா ரூ.15 ஆயிரம் ஒதுக்கப்படுவது வழக்கம். இதுபோக ஆரம்ப பள்ளிகள் எனில் ரூ.7 ஆயிரமும், ஆரம்ப பள்ளிகளுக்கு முந்தைய வகுப்புகள் கொண்ட பள்ளிகள் எனில் ரூ.5 ஆயிரமும் கூடுதலாக ஒதுக்கப்படும். இது அடிப்படை மானியம் என அழைக்கப்படும்.

வருடந்தோறும், பள்ளிகளின் கல்வியாண்டு ஆரம்பிக்கும் ஜூன் மாதத்தில், இந்த நிதி ஒதுக்கப்படும். ஆனால், இவ்வாண்டு இதுவரை நிதியை கர்நாடக அரசு ஒதுக்கவில்லை. எனவே சாக்பீஸ் வாங்கவும் பணமின்றி, ஆசிரியர்களே சாக்பீஸ் வாங்கி வந்து பாடம் நடத்துகிறார்கள்.
எனவே, ஜனவரி மாதத்தில், 3 நாட்களுக்கு தொடர்ச்சியாக பள்ளிகளை மூடி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். ஆசிரியர்கள் சங்க கூட்டத்தில் ஆலோசித்து தேதியை முடிவு செய்வோம் என்றார்.












Click it and Unblock the Notifications