ஜெ.வை விடுதலை செய்து நீதிபதி குமாரசாமி நீதியை சிதைத்துவிட்டார்- சுப்ரீம் கோர்ட்டில் சு.சுவாமி வாதம்
டெல்லி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடகா உயர்நீதிமன்றம் (நீதிபதி குமாரசாமி) நீதியை சிதைத்துவிட்டது; ஜெயலலிதாவுக்கு தண்டனை விதித்த விசாரணை நீதிமன்றம் (நீதிபதி குன்ஹா) தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில் வாதிட்டார்.
ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு மற்றும் திமுக பொதுச்செயலர் அன்பழகன் ஆகியோர் மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்தனர். இதன் மீதான விசாரணை 9-வது நாளாக நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நடைபெற்றது.

இன்றைய விசாரணையின் தொடக்கத்தில் கர்நாடகா அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிவி ஆச்சார்யா ஆஜராகி தமது இறுதிவாதத்தை முன்வைத்தார். இதனைத் தொடர்ந்து இவ்வழக்கின் முதல் மனுதாரர் (வருமானத்துக்கு அதிகமாக ஜெயலலிதா சொத்து குவித்ததாக முதலில் புகார் கொடுத்தவர்) என்ற அடிப்படையில் சுப்பிரமணியன் சுவாமி 1 மணிநேரம் வாதங்களை முன்வைக்க நீதிபதிகள் அனுமதித்தனர்.
அப்போது சுப்பிரமணியன் சுவாமி முன்வைத்த வாதங்கள்:
ஜெயலலிதா தமது பதவியை பயன்படுத்தி இந்த வழக்கை திசை திருப்பினார். கர்நாடகா உயர்நீதிமன்றம் (நீதிபதி குமாரசாமி) எதிர்த்தரப்பு தங்களது வாதங்களை முன்வைக்க போதுமான கால அவகாசத்தை வழங்கவில்லை.
அதுவும் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த ஆவணங்களைக் கூட அவர் முறையாக பரிசீலிக்கவும் இல்லை. கர்நாடகா அரசு தரப்பும் நானும் முன்வைத்த ஆட்சேபனைகளையும் கர்நாடகா உயர்நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை.
ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுதலை செய்து நீதியின் மாண்பை கர்நாடகா உயர்நீதிமன்றம் (நீதிபதி குமாரசாமி) முழுமையாகவே சிதைத்துவிட்டது. இந்த பிழையை சரி செய்தாக வேண்டும்.
ஜெயலலிதாவை விடுதலை செய்த கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் (நீதிபதி குமாரசாமி) தீர்ப்பில் கணிதப் பிழைகளும் உள்ளன. ஆகையால் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு சிறை தண்டனை விதித்த விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை (நீதிபதி குன்ஹா) உச்சநீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி வாதிட்டார்.
அப்பீல் வழக்கில் அன்பழகன் தரப்பு வாதத்தை முன்வைக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி- ஜெ. கோரிக்கை நிராகரிப்பு












Click it and Unblock the Notifications