நாட்டில் ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதை நீதிபதி குமாரசாமி கருத்தில் கொள்ள வேண்டும்: சுப்ரீம் கோர்ட்
டெல்லி: ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பளிக்கும் போது சமுதாயத்தை மிகவும் பாதித்துள்ள ஊழலை நாட்டில் ஒழிக்க வேண்டும் என்பதையும் நீதிபதி குமாரசாமி கருத்தில் கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் தமக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். இம்மனு மீது தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி விசாரணை நடத்தி தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளார்.

அன்பழகன் மனு விவரம்
இதனிடையே இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் பவானி சிங், ஜெயலலிதாவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், அவர் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டது செல்லாது; அவரை நீக்க வேண்டும் என்று தி.மு.க. பொதுச் செயலாளர் க. அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.

மாறுபட்ட தீர்ப்பு- 3 நீதிபதி பெஞ்ச்சுக்கு பரிந்துரை
இந்த மனுவை மனு நீதிபதிகள் எம்.பி.லோகூர், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து மாறுபட்ட தீர்ப்புகளை அளித்தது. இதையடுத்து இந்த வழக்கு 3 பேர் கொண்ட பெஞ்சுக்கு மாற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.கே. அகர்வால் மற்றும் பிரபுல்ல சி.பந்த் ஆகியோர் கொண்ட பெஞ்ச் இது தொடர்பாக விசாரணை நடத்தி இன்று தீர்ப்பளித்தது.

தமிழகத்துக்கு அதிகாரம் இல்லை..
அப்போது பவானிசிங்கை அரசு வழக்கறிஞராக தமிழக அரசு நியமித்தது செல்லாது; கர்நாடகா அரசுக்குத்தான் அதிகாரம் உண்டு, பவானிசிங்கின் எழுத்துப்பூர்வமான வாதத்தை கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி ஏற்கக் கூடாஎன்று உத்தரவிட்டனர்.

சமுதாயத்தை பாதித்த ஊழல்
அத்துடன் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை முடிவடைந்துவிட்ட நிலையில் மறுவிசாரணை தேவை இல்லை என்றும் எந்த ஒரு ஊழல் வழக்கையும் ஏனோதானோவென பார்க்கக் கூடாது; ஊழல்வாதிகள் பெற்ற ஆதாயத்தை கருத்தில் கொள்ள வேண்டும். சமுதாயத்தை ஊழல் பாதித்துள்ளதை அறிந்து செயல்படுவது அவசியம்.

நாட்டில் ஊழலை ஒழிக்க..
நாட்டில் ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதையும் கவனத்தில் கொண்டு நீதியை நிலைநாட்டும் வகையில் நீதிபதி குமாரசாமி தீர்ப்பளிக்க வேண்டும் என்றும் நீதிபதி மிஸ்ரா தலைமையிலான உச்சநீதிமன்ற பெஞ்ச் அறிவுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications