இன்று திருவள்ளுவர் தினம் - அய்யன் சிலைக்கு கர்நாடக தமிழ் பத்திரிக்கையாளர்கள் மாலை அணிவித்து மரியாதை!
பெங்களூரு: பொங்கல் திருநாளைத் தொடர்ந்து இன்று திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுவதைத் தொடர்ந்து கர்நாடக தமிழ் பத்திரிக்கையாளர்கள் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பெங்களூருவிலும் இன்று திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து பெங்களூரு அல்சூர் ஏரிக்கரையில் உள்ள அய்யன் திருவள்ளுவர் சிலைக்கு கர்நாடக வாழ் தமிழ் பத்திரிக்கையாளர்கள் மாலை அணிவித்தினர்.திருவள்ளுவர் என்ற முற்றும் அறிந்த ஞானியால் தமிழுக்கும் தமிழகத்திற்கும் மிகப்பெரிய பெருமை உலகளவில் கிடைத்திருக்கிறது .
தமிழை தரணியில் தலைநிமிர்ந்து நிற்கச் செய்திருப்பதுடன் இவர் இயற்றிய திருக்குறள் நம் தமிழன்னையின் சிகையில் மின்னும் கிரீடமாக அழகு செய்கின்றது. மக்களின் வாழ்வியலை மையமாக வைத்து இயற்றப்பட்ட இந்நூல், மக்களுக்குத் தேவையானது, தேவையற்றதை தெளிவாக எடுத்து இயம்புவதால் இந்நூல் நீதிநூல் எனப் போற்றப்படுகின்றது.
தமிழை, தமிழர்களை உலகளவில் அடையாளம் காணச் செய்த வள்ளுவரை போற்றும் விதமாக, வணங்கும் விதமாக அவருக்கு நன்றியை தெரிவிக்கும் வகையில் திருவள்ளுவர் தினத்தை சிறப்புமிக்க இத்தமிழ்த் திருநாளில் திருவள்ளுவர் நம் ஒவ்வொருவர் வாழ்வில் இரண்டறக் கலந்து உள்ளார் என்பதனை நினைவு கூறும் வகையில் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்கின்றோம் என்பது குறிப்பிடத்தக்கது.