கூட நின்று செல்ஃபி எடுத்த மாணவனை அடித்து போனை உடைத்த அமைச்சர்.. அதிர்ச்சி வீடியோ
Recommended Video
பெங்களூர்: தன்னிடம் நின்று செல்ஃபி எடுத்த இளைஞனை கர்நாடக அமைச்சர் அடித்து தள்ளியது வீடியோவில் பதிவாகி வைரலாகியுள்ளது.
கர்நாடக காங்கிரஸ் அரசில், மின்துறை அமைச்சராக பதவி வகிப்பவர் டி.கே.சிவகுமார். கிரானைட், ரியல் எஸ்டேட் தொழிலதிபரான இவர், அடாவடிகளுக்கு பெயர் போனவர்.
நேற்று பெல்காமில் நடைபெற்ற 'குழந்தைகள் உரிமை' நிகழ்ச்சியில் அமைச்சர் சிவகுமார், பங்கேற்றபோது, மனித உரிமைகளை மீறி செயல்பட்டார் என்பதுதான் இதில் கவனிக்ககத்தக்கது.
செல்ஃபி முயற்சி
நிகழ்ச்சிக்கு பிறகு வெளியே நிருபர்களிடம் பேசுவதற்காக சிவகுமார் நின்றிருந்தார். அப்போது, அவரது பின்னால் ஒரு கல்லூரி மாணவன் தனது செல்போனை எடுத்து செல்ஃபி எடுக்க முற்பட்டார். அமைச்சருடன் தான் நிற்பதை போல படம் வர வேண்டும் என அவர் முயன்றார்.
|
ஓங்கி அடித்தார்
அப்போது எரிச்சலுற்ற சிவகுமார், திடீரென திரும்பி சட்டென அந்த மாணவன் கையை ஓங்கி அடித்துவிட்டார். இதனால் மாணவன் கையில் இருந்த போன் கீழே விழுந்து நொறுங்கியது. போனை எடுக்க மாணவன் ஓடிய நிலையில், எதுவுமே நடக்காததை போல பிரஸ் மீட்டை ஆரம்பித்தார் அமைச்சர்.
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா
இந்த வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது ஒரு பெரிய விஷயம் இல்லை என சிவகுமார் விளக்கம் அளித்துள்ளார். யாராக இருந்தாலும் அடிப்படை அறிவு இருக்க வேண்டும். பேட்டியளிக்கும்போது எனக்கு இடையூறு செய்வது சரியான செயல் இல்லை என்று சிவகுமார் விளக்கம் அளித்துள்ளார்.
கண்டனங்கள்
இதனிடையே சிவகுமாரின் செயலுக்கு எதிர்க்கட்சியான பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. அமைச்சரின் தொடர் அராஜக போக்கின் வெளிப்பாடு இது என்று எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டித்துள்ளனர். சொத்து குவிப்பு தொடர்பாக, சிவகுமார் வீடு மற்றும் அலுவலகத்தில் சில மாதங்கள் முன்பு வருமான வரித்துறை ரெய்டுகள் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.