கனிம சுரங்க ஊழல்: கர்நாடக அமைச்சர் சந்தோஷ் லாட் ராஜினாமா
பெங்களூர்: கனிம சுரங்க ஊழல் புகாரில் சிக்கிய கர்நாடக அமைச்சர் சந்தோஷ் லாட் நேற்று தமது பதவியை ராஜினாமா செய்தார்.
கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது அமைச்சரவையில் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் தகவல் துறை அமைச்சராக இருந்தவர் சந்தோஷ் லாட். இவர் ஒரு கனிம சுரங்க நிறுவனத்தின் பங்குதாரராகவும் உள்ளார். இந்த நிலையில், அவரது கனிம சுரங்க நிறுவனம் சட்டவிரோத சுரங்க தொழிலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

இதைத்தொடர்ந்து, அமைச்சர் சந்தோஷ் லாட் பதவி விலக வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி போர்க்கொடி உயர்த்தியது. ஆளுநர் மாளிகைக்கு பேரணியாக சென்று கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுத்தது.
இந்நிலையில், கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் பெல்காமில் வருகிற 25-ந் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. சந்தோஷ் லாட் ராஜினாமா விவகாரத்தில் அரசு உடனடியாக முடிவு எடுக்காவிட்டால், சட்டசபை கூட்டத்தை நடத்த விட மாட்டோம் என்றும் பாஜக போர்க்கொடி உயர்த்தியது.
இதனால் முதல்வர் சித்தராமையாவுக்கு நெருக்கடி முற்றியது. இதைத்தொடர்ந்து அமைச்சர் சந்தோஷ் லாட்டை பதவியில் இருந்து விடுவிப்பது குறித்து காங்கிரஸ் கட்சி மேலிடம் தீவிர ஆலோசனை நடத்தி வந்தது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், சந்தோஷ் லாட் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். அவர் இன்று ராஜினாமா கடிதத்தை முதல்வரிடம் கொடுக்க இருக்கிறார்.
கனிம சுரங்க ஊழல் தொடர்பான முன்னாள் லோக் அயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டேவின் அறிக்கை தான் கடந்த பாரதிய ஆட்சியை ஆட்டிப் படைத்தது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ், அதை ஆயுதமாக எடுத்துக் கொண்டு பிரச்சினையை கிளப்பியது.
தற்போது காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் நிலையில் அதே ஆயுதத்தை பாஜக கையில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications