ராஜ்யசபா தேர்தலில் ஓட்டுபோட ரூ.5 கோடி கேட்ட கர்நாடக எம்எல்ஏக்கள்.. ஸ்டிங் ஆபரேஷனில் சிக்கினர்
பெங்களூர்: ராஜ்யசபா தேர்தலில் வாக்களிப்பதற்காக கர்நாடக எம்எல்ஏக்கள் சிலர், சுமார் ரூ.5 கோடி வரை பேரம் பேசியதாக ஸ்டிங் ஆபரேஷன் நடத்தி வீடியோ வெளியிட்டுள்ளது இந்தியா டுடே டிவி சேனல். இந்த சம்பவம் நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜ்யசபாவில் காலியாக உள்ள சில பதவியிடங்களுக்கு வரும் 11ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடகாவில் தங்கள் எம்.எல்.ஏக்கள் பலத்தின் அடிப்படையில், பாஜகவால் 1 எம்.பியையும், காங்கிரசால் 2 எம்.பி.க்களையும் வெற்றிபெறச் செய்ய முடியும்.
ஆனால், காங்கிரஸ் கூடுதலாக ஒரு வேட்பாளரை களமிறக்கியுள்ளது. சுயேச்சைகள் தங்களுக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையில் தலைமை இவ்வாறு களமிறக்கியுள்ளது. முன்னாள் பிரதமர் ஹெச்.டி.தேவகவுடாவின் ம.ஜ.த கட்சியும், ஒரு வேட்பாளரை களமிறக்கியுள்ளது.

இதனால் சுயேச்சைகள், கர்நாடக ஜனதா போன்ற சிறிய கட்சி எம்எல்ஏக்களுக்கு டிமாண்ட் அதிகரித்தது. காங்கிரஸ் மற்றும் மஜத ஆகிய இரு கட்சிகளுமே இந்த எம்எல்ஏக்கள் ஆதரவை திரட்டி வருகிறார்கள்.
இதனிடையே, எம்எல்ஏக்களை இழுக்க குதிரை பேரம் ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியானது. இதை உறுதி செய்யும் வகையில் ரகசிய கேமராவை கொண்டு, பேரத்திற்கு படிந்த சில எம்எல்ஏக்களிடம் இந்தியா டுடே நிருபர்கள் நடத்திய ரகசிய ஆபரேசன் தற்போது அம்பலமாகியுள்ளது.
ம.ஜ.த ககட்சியின் சாமுண்டேஸ்வரி தொகுதி எம்எல்ஏ ஜி.டி.தேவேகவுடா, பசவகல்யாண் தொகுதியின் மல்லிகார்ஜுன் குபா, ஆலந்தா தொகுதியின் கர்நாடக ஜனதா கட்சி எம்எல்ஏ, பி.ஆர்.பாட்டில், கோலார் தொகுதியின் சுயேச்சை எம்எல்ஏ வர்த்தூர் பிரகாஷ் ஆகியோர் ஸ்டிங் ஆபரேசனில் சிக்கியவர்கள்.
இதில் 3 எம்எல்ஏக்கள் ரூ.5 கோடி வரை பணம் கேட்பது பதிவாகியுள்ளது. ஜி.டி.தேவகவுடாவின் உதவியாளரோ, ரூ.10 கோடி வரை பணம் கேட்பதாகவும் அதில் பதிவாகியுள்ளது.
எம்எல்ஏக்கள் தங்களின் ஒரு ஓட்டுக்கு ரூ.5 கோடிவரை பணம் கேட்ட சம்பவம் நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அந்த எம்எல்ஏக்கள் குற்றச்சாட்டை மறுத்துவருகிறார்கள்.












Click it and Unblock the Notifications