கர்நாடகத்துக்கு தனிக் கொடி தேவை-கன்னட அமைப்பினர் மீதான வழக்குகள் வாபஸ்: முதல்வர் சித்தராமையா
கர்நாடக மாநிலத்துக்கு தனிக் கொடி தேவை என்று முதல்வர் சித்தராமையா திட்டவட்டமாக கூறியுள்ளார்.
பெங்களூர்: கன்னடர்களின் பெருமையை நிலைநாட்ட கர்நாடக மாநிலத்துக்கென தனிக்கொடி தேவை என முதல்வர் சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.
பெங்களூரில் உள்ள பேலஸ் மைதானத்தில் கன்னட ரக்ஷன வேதிக அமைப்பின் சார்பில் பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கர்நாடக முதல்வர் சித்தராமையா கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், முதல்வர் என்ற முறையிலும், 6.5 கோடி மக்களின் பிரதிநிதி என்ற முறையிலும் கர்நாடகா மாநிலத்துக்கு தனிக் கொடி தேவை என்பதில் நான் உறுதியாக உள்ளேன். மாநிலத்துக்கென தனிக் கொடி இருக்கக் கூடாது என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை.
உயர்ந்த இடத்தில்
கர்நாடகத்துக்கு தனிக் கொடி பெறுவதன் மூலம் தேசியக் கொடியை நாங்கள் அவமதிப்பதாக அர்த்தம் இல்லை. நமது இந்திய தேசியக் கொடியை எப்போது உயர்ந்த இடத்தில் வைத்து மதிப்போம்.
இந்தி மொழியை அனுமதிக்க மாட்டோம்
கேரளம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இயக்கப்படும் மெட்ரோ ரயில்களில் இந்தி மொழி இல்லாதபோது கர்நாடகாவில் மட்டும் ஏன் இந்தி தேவைப்படுகிறது. இந்தி மொழியைப் பயன்படுத்த முடியாது என்றும் அதை கர்நாடகாவில் அனுமதிக்க முடியாது என்றும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
எந்த மொழி வேண்டுமானாலும் பேசட்டும்
மாநிலத்தில் உள்ள மக்கள் எந்த மொழியை பேசுகிறார்கள் என்பது ஒரு பொருட்டே இல்லை. ஆனால் ஒவ்வொருவரும் கன்னடர்களாக இருக்க வேண்டும். ஒருவர் எந்த பகுதியில் வேண்டுமானாலும் இருக்கட்டும், எந்த மொழி வேண்டுமானாலும் பேசிக் கொள்ளட்டும்.
கன்னட அமைப்புகளுக்கு நன்றி
ஆனால் கர்நாடகாவில் குடிபெயர்ந்துவிட்டால் அவர் முதலில் கன்னடர், அதன் பின்னர்தான் அவர் சார்ந்த மாநிலத்தைச் சேர்ந்தவராவார். கன்னட அமைப்பினர் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்ப பெறப்படும். மாநிலத்தின் மொழி, மண், தண்ணீர் உள்ளிட்டவைகளுக்காக போராடிய அவர்களுக்கு நன்றி என்றார் சித்தராமையா.