பலாத்கார குற்றவாளிகளை நான் ஆதரிக்கவில்லை! கோயிலில் கற்பூரம் அடித்து சத்தியம் செய்த அமைச்சர்
பெங்களூரு: பலாத்கார குற்றவாளிகளை காப்பாற்ற முயன்றதாக எதிர்க்கட்சியினர் கூறிய குற்றச்சாட்டை மறுப்பதற்காக சாமி முன்பு கற்பூரத்தில் சத்தியம் செய்துள்ளார் கர்நாடக அமைச்சர் ஒருவர்.
கர்நாடக மாநிலம் ஷிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். அவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதாக அம்மாவட்ட பாஜக குற்றம் சாட்டியது.
எடியூரப்பா குற்றச்சாட்டு
மேலும் ஷிவமொக்கா மாவட்டத்தை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா, பக்கத்து மாவட்டத்தை சேர்ந்த மக்களவை உறுப்பினர் ஷோபா கரந்தலாஜே போன்றோர், துவக்க கல்வி அமைச்சர் கிம்மனே ரத்னாகர்தான் (மாவட்ட பொறுப்பு அமைச்சரும்கூட) குற்றவாளிகளை காப்பாற்றுவதாக பகிரங்கமாக குற்றம்சாட்டினர்.
கற்பூரத்தில் அடித்து சத்தியம்
இதனால் கோபமடைந்த அமைச்சர் ரத்னாகர், தீர்த்தஹள்ளியிலுள்ள ராமேஸ்வர், வெங்கடரமணசாமி, கல்லாரே கணபதி மற்றும் மாரிகாம்பா கோயில்களுக்கு தனது தொண்டர்களுடன் சென்று தரிசனம் செய்தார். இதன்பிறகு, குற்றவாளிகளுக்கு தான் அடைக்கலம் தரவில்லை என, கற்பூரத்தில் அடித்து சத்தியம் செய்தார் அமைச்சர். கோயிலுக்கு ரூ.1001 காணிக்கையும் செலுத்தினார்.
தர்மஸ்தலா வர வேண்டும்
மேலும் அவர் கூறுகையில், "என்மீது குற்றம் சுமத்திய எடியூரப்பா உள்ளிட்டோர் தமர்மஸ்தலாவிலுள்ள மஞ்சுநாதர் கோயிலுக்கு வர வேண்டும். அங்கு வந்து, என்மீது கூறிய குற்றச்சாட்டு உண்மைதான் என்று சத்தியம் செய்ய வேண்டும். நானும் தர்மஸ்தலாவுக்கு செல்ல உள்ளேன். என்மீது வீண்பழி சுமத்தியவர்களை நீயே கேள் என்று மஞ்சுநாதரிடம் கோரிக்கை வைக்க உள்ளேன்" என்றார் ஆக்ரோஷமாக.
சக்தி வாய்ந்த தெய்வம்
மங்களூர் அருகேயுள்ள தர்மஸ்தலா மஞ்சுநாதர் (சிவபெருமான்) சுவாமி கோயிலில் பொய் சத்தியம் செய்தால் கண்டிப்பாக தண்டனை உண்டு என்பது பக்தர்கள் நம்பிக்கை. ஏற்கனவே மஜதவின் குமாரசாமிக்கும், எடியூரப்பாவுக்கும் ஒரு சொற்போர் வெடித்தபோது மஞ்சுநாதர் கோயிலில் சத்தியம் செய்ய எடியூரப்பா, குமாரசாமிக்கு அழைப்பு விடுத்தார் என்பது நினைவிருக்கலாம்.