கர்நாடகா தேர்தலுக்கு பிறகுதான் காவிரி வழக்கு.. 14ம் தேதி வரைவு தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவு
மத்திய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பிரமாண பத்திரத்தை பரிசீலித்து இன்று உச்சநீதிமன்றம் தனது விசாரணையின்போது உத்தரவு பிறப்பிக்க கூடும்...
Recommended Video

டெல்லி: காவிரி நதிநீர் பங்கீடு குறித்த வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்வது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணை 14ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
காவிரி நீர் பங்கீடு தொடர்பாக தமிழகம், கர்நாடகா தாக்கல் செய்த வழக்கில் கடந்த பிப்ரவரி 16ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரின் அளவை குறைத்த உச்சநீதிமன்றம், தீர்ப்பை செயல்படுத்த 6 வாரங்களுக்குள் திட்டத்தை உருவாக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
ஆனால், கால அவகாசம் முடியும் தருவாயில், 'ஸ்கீம்' என்று குறிப்பிட்டிருப்பது பற்றி மத்திய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்திடம் விளக்கம் கேட்கப்பட்டது. இதனால் தீர்ப்பை அமல்படுத்துவது தள்ளிப்போனது. இதையடுத்து தீர்ப்பை அமல்படுத்தத் தவறிய மத்திய அரசு மீது தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

தாக்கல் செய்யவில்லை
இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் காவிரி விவகாரத்தில் வரைவு திட்டத்தை மே 3ம் தேதி தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், மத்திய அரசு வரைவு திட்டத்தை தாக்கல் செய்யவில்லை. எனவே, வரைவு அறிக்கை நிலை என்ன என்பது பற்றிய பிரமாண பத்திரத்தை மத்திய அரசு 8ம் தேதியான இன்று, தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

விசாரணை தாமதம்
ஆனால், மத்திய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பிரமாண பத்திரத்தை பரிசீலித்து இன்று உச்சநீதிமன்றம் தனது விசாரணையின்போது உத்தரவு பிறப்பிக்க கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதனிடையே, வழக்கு விசாரணை காலை 10.30 மணிக்கு வர உள்ளதாக எதிர்பார்த்த நிலையில், வழக்கு விசாரிக்கப்படவில்லை.

வேறு வழக்கு
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிரான தகுதிநீக்க வழக்கில், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் ஆஜரானதால், வழக்கு விசாரணையை தாமதிக்க மத்திய அரசு தரப்பு, கோரிக்கை விடுத்தது இதற்கு காரணம், இதையேற்றுக்கொண்டு, காவிரி வழக்கு இன்றைய தினத்திலேயே சில மணி நேரங்களுக்கு பிறகு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்தது. எனவே பகல் 12.30 மணியளவில் காவிரி விசாரணை தொடங்கியது.

கர்நாடக தேர்தல்
அப்போது வாதிட்ட தமிழக அரசு சார்பிலான வழக்கறிஞர், மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்துவிட்டது. மத்திய அரசை நம்பினால் காவிரியில் ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழகத்திற்கு கிடைக்காது என தெரிவித்தார். இதையடுத்து, காவிரி நீர் பங்கீட்டிற்கான வரைவு திட்டத்தை தாக்கல்செய்ய மத்திய அரசு சார்பில் மேலும் 10 நாட்கள் அவகாசம் கேட்கப்பட்டது. கர்நாடகா தேர்தலால் காவிரி விவகாரத்தில் முடிவெடுக்க முடியாமல் உள்ளோம் என்று மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து வரும் 14ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்த சுப்ரீம் கோர்ட், அன்று மத்திய அரசு காவிரி வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. மே 12ம் தேதி கர்நாடக தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது. எனவே மத்திய அரசு விரும்பியபடி, வழக்கு விசாரணை தேர்தலை தாண்டி போய்விட்டது.












Click it and Unblock the Notifications