பெண் வெட்கப்பட, ஊரே எட்டி பார்க்க.. இந்த மாதிரி ஒரு திருமண ஊர்வலத்தை பார்த்திருக்கிறீர்களா?
Recommended Video

மங்களூர்: கர்நாடகாவில் புது மணப்பெண் மற்றும் மணமகன் ஜேசிபி இயந்திரத்தில் அமர்ந்து திருமண ஊர்வலம் நடத்திய புகைப்படம் இப்போது வைரலாகியுள்ளது.
கர்நாடக மாநிலம் தென் கனரா மாவட்டம் புத்தூர் நகரை சேர்ந்தவர் சேத்தன். இவர் ஜேசிபி ஆபரேட்டராக உள்ளார். சமீபத்தில் இவருக்கும் மமதா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது.
வழ்கமாக திருமணம் நடைபெறும்போது மாப்பிள்ளை அலங்கரிக்கப்பட்ட காரில் திருமண மண்டபம் வருவார். திருமணத்திற்கு பிறகு அலங்கரிக்கப்பட்ட காரில் வீட்டுக்கு செல்வார்கள்.

நன்றிக்கடன்
ஆனால், சேத்தனோ, காருக்கு பதிலாக ஜேசிபி இயந்திரத்தை இதற்கு பயன்படுத்த முடிவு செய்தார். ஜேசிபி வாகனம்தான் தனக்கு படியளக்கிறது என்பதால் அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இதை செய்ய அவர் முடிவு செய்தார்.

ஜேசிபி ஓட்டிய மாப்பிள்ளை
இதன்படி, நண்பர்களிடம் சொல்லி ஒரு ஜேசிபி வாகனத்திற்கு நன்கு அலங்காரம் செய்ய வைத்தார். ஆடி, பிஎம்டபிள்யூ கார்களை கேட்பார் என்று பார்த்தால் ஜேசிபி கேட்கிறாரே என சிரித்தபடி நண்பர்களும் ஜேசிபியை அலங்கரித்துள்ளனர். திருமணத்திற்கு வரும்போது சேத்தனே அதை ஓட்டியும் வந்துள்ளார்.

ஊரே வேடிக்கை
திருமணம் முடிந்த பிறகு, மனைவி மமதாவுடன், ஜேசிபி இயந்திரத்தில் ஏறி வீட்டுக்கு ஊர்வலமாக சென்றுள்ளார். அதுவும் எப்படியென்றால், ஜேசிபி வாகனத்தின் முன்பாக இருக்குமே அந்த பக்கெட் பகுதியில் அமர்ந்தபடி. இதுபோன்ற ஒரு திருமண ஊர்வலத்தை பார்த்ததில்லை என்பதால் ஊரே கூடி நின்று வேடிக்கை பார்த்து மகிழ்ந்தது. இதை பார்த்த மமதாவுக்கோ வெட்கம் பிடுங்கி தின்றது. இருப்பினும், கணவர் ஆசைக்காக முகத்தை அவ்வப்போது மூடி சிரித்தபடி சமாளித்தார்.

வைரலான படம்
இதனிடையே இந்த வித்தியாசமான திருமண ஊர்வலம் தொடர்பான போட்டோ நாடு முழுக்க வைரலாக சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது. சிறப்பு ஏற்பாடு மூலம் கிடைத்த புகைப்படத்தை செய்தியில் பகிர்ந்துள்ளோம். நீங்களும் அந்த ஊர்வலத்தை பாருங்கள். செய்யும் தொழிலே தெய்வம் என நினைத்து ஜேசிபியில் திருமண ஊர்வலம் நடத்திய தம்பதியை வாழ்த்துங்கள்.












Click it and Unblock the Notifications