சீக்கியர்கள் வசதிக்காக அமைய உள்ள கர்த்தார்பூர் வழித்தடம்.. இந்தியா - பாக்., அதிகாரிகள் பேச்சு
அமிர்தசரஸ்: கர்த்தார்பூர் வழித்தடம் அமைப்பது தொடர்பாக இந்தியா - பாகிஸ்தான் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவாா்த்தை துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் இந்திய வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
வாகா எல்லையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் முகமது பைசல் தலைமையில் 20 பாகிஸ்தான் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

கர்தார்பூர் வழித்தடம் இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான ஒரு முன்மொழியப்பட்ட எல்லை போக்குவரத்து திட்டமாகும். இந்தியாவிலிருக்கும் சீக்கிய மக்களின் வசதிக்காக, பாகிஸ்தானின் கர்த்தார்பூருக்கு சாலை அமைக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
இத்திட்டப்படி இந்தியாவின் பஞ்சாபில் அமைந்துள்ள தேரா பாபா நானக் சாஹிப், மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாபில் அமைந்துள்ள குருத்வாரா தர்பார் சாஹிப் கர்தார்பூர் ஆகிய சீக்கிய ஆலயங்களை இணைக்கும் வகையில் வழித்தடம் உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
Indian delegation arrives at Wagah border in Pakistan, to hold bilateral meeting with their Pakistani counterparts on #KartarpurCorridor. pic.twitter.com/vjtFbuu7o6
— ANI (@ANI) July 14, 2019
மேலும் பாகிஸ்தான்-இந்தியா எல்லையில் இருந்து 4.7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கர்தார்பூரில் உள்ள குருத்வாராவிற்கு, விசா இல்லாமல் இந்தியாவிலுள்ள சீக்கியர்கள் வழிபாட்டிற்கு செல்லவும் பார்வையிடவும் அனுமதிக்கும் நோக்கில், இந்த பாதை திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த 1999-ம் ஆண்டு டெல்லி-லாகூர் இடையிலான பேருந்து போக்குவரத்து திட்டத்தின் போது, கர்தார்ப்பூர் நடைபாதை திட்டத்தை அப்போதைய இந்திய பிரதமர் வாஜ்பாய் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆகியேர் முன்மொழிந்தனர். பின்னர் நீண்ட ஆண்டுகளாக பரிசீலனையில் இருந்த இத்திட்டத்திற்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தான் தரப்பிலிருந்து அடிக்கல் நாட்டப்பட்டது.
அதற்கு 2 நாட்களுக்கு பின்னர் இந்தியா தரப்பில் இந்த நடைபாதைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. நவம்பர் 2019-ல் குரு நானக் தேவின் 550-வது பிறந்த நாளுக்குள், இந்த வழித்தட திட்டத்தை நிறைவு செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது. அதற்குள் கடந்த பிப்ரவரியில் நிகழ்த்தப்பட்ட புல்வாமா தாக்குதலால் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் சுணக்கம் ஏற்பட்டது.
கடந்த சில மாதங்களாக இருநாடுகளுக்கிடையேயான உறவில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், நீண்ட நாட்களுக்கு பின்னர் தற்போது கர்த்தார்பூர் திட்டம் தொடர்பாக இருநாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications