கை காட்டிய ஆடிட்டர்... மாட்டிய கார்த்தி - நேருக்கு நேர் விசாரிக்க சிபிஐ திட்டம்
கார்த்தி சிதம்பரத்தை கை காட்டி விட்டது பாஸ்கரராமன்தான் என்பதால் இருவரையும் ஒரே அறையில் நேருக்கு நேராக வைத்து விசாரிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Recommended Video

டெல்லி: மும்பை சிறையில் உள்ள இந்திராணி முகர்ஜி, டெல்லி சிறையில் உள்ள ஆடிட்டர் பாஸ்கரராமன், ஆகியோரையும் காவலில் எடுத்து கார்த்தி சிதம்பரத்துடன் சேர்த்து விசாரிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது கடந்த 2007ஆம் ஆண்டில் ப. சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தார். அப்போது மும்பையைச் சேர்ந்த ஐஎன்எக்ஸ் மீடியா என்ற தொலைக்காட்சி நிறுவனம் வெளிநாட்டில் இருந்து அன்னிய நேரடி முதலீடுகளைப் பெற விண்ணப்பித்தது. ரூ 4.62 கோடி முதலீட்டைப் பெற அன்னிய மேம்பாட்டு வாரியம் அனுமதி அளித்தது.
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனமானது ஷீனா போரா கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோருக்கு சொந்தமானதாகும்.

கார்த்தி சிதம்பரம்
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி முதலீடு பெறுவதற்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளிக்கவில்லை. ஆனால், கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, சட்டவிரோதமாக அனுமதி பெற்றுத் தந்தார் என்பது புகார்.

வழக்கு பதிவு செய்த சிபிஐ
இதற்காக கார்த்தி சிதம்பரம் தனது அட்வான்டேஜ் ஸ்டிராடஜ் கன்சல்டிங் பிரைட்வேட் லிமிட் நிறுவனம் மூலம் கடந்த 2008ம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி ரூ.10 லட்சம் பெற்றதாக சிபிஐ கடந்த ஆண்டு மே மாதம் வழக்குப் பதிவு செய்தது. கார்த்தி சிதம்பரம் வீடு, அலுவலகங்களில் பலமுறை ரெய்டு நடத்தப்பட்டுள்ளது.

ஆடிட்டர் கைது
இந்த வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமனுக்கு அமலாக்கப் பிரிவு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாத காரணத்தால் கடந்த மாதம் 16ஆம் தேதி டெல்லியில் சிபிஐ கைது செய்தது. இவரிடம் சிபிஐ போலீசார் கிடுக்கிப் பிடி விசாரணை நடத்தினர். கடந்த 26ஆம் தேதி அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார். சிபிஐ விசாரணையில் கார்த்தியை கை காட்டி விட்டார் ஆடிட்டர் பாஸ்கரராமன்.

லுக் அவுட் நோட்டீஸ்
இந்த வழக்குகளில் ஆஜராகக் கோரி கார்த்திக்கு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டது. கடந்த ஜனவரி 18ஆம் தேதியன்று அவர் அமலாக்கத்துறை முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார். இதனிடையே கார்த்தி வெளிநாடு தப்பி சென்று விடாமல் இருக்க லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

சிபிஐ காவலில் விசாரணை
இதனிடையே சிபிஐ அனுமதியுடன் வெளிநாடு சென்று திரும்பிய கார்த்தி சிதம்பரம் கடந்த 28ஆம் தேதி கைது செய்யப்பட்டார். சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 5 நாட்கள் கஷ்டடியில் எடுத்து விசாரித்து வருகின்றனர். முதல்நாளான இன்று காலை 8 மணிமுதல் பல கேள்விகளைக் கேட்டு குடைந்துள்ளனர். ஆனால் எந்த கேள்விக்குமே கார்த்தி பதில் கூறாமல் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நேருக்கு நேர் விசாரணை
கார்த்தி சிதம்பரத்தை கை காட்டி விட்டது பாஸ்கரராமன்தான் என்பதால் இருவரையும் ஒரே அறையில் நேருக்கு நேராக வைத்து விசாரிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும் கார்த்தி சிதம்பரத்தின் கணக்கில் வராத சொத்துக்களை பராமரித்தல், கணக்கில் கொண்டு வருதல் போன்றவற்றை பாஸ்கரராமன் செய்துவந்ததாக சிபிஐ தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications