ஐஎன்எக்ஸ் விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் வரும் 23-ல் ஆஜராக உத்தரவு!
ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம் தொடர்பான வழக்கில் வரும் 23-ல் கார்த்தி சிதம்பரம்.
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம் தொடர்பாக சிபிஐ முன்பு வரும் 23-ல் ஆஜராக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு அன்னிய முதலீட்டு அனுமதியை பெற்றுக் கொடுத்ததில் கார்த்தி சிதம்பரம் ஆதாயம் அடைந்தார் என்பது சிபிஐ வழக்கு. இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக கார்த்தி சிதம்பரத்துக்கு சிபிஐ உத்தரவிட்டிருந்தது.
ஆனால் கார்த்தி சிதம்பரம் ஆஜராகவில்லை. இதையடுத்து கார்த்தி சிதம்பரத்தை தேடப்படும் நபராக அதாவது லுக் அவுட் நோட்டீஸை உள்துறை அமைச்சகம் பிறப்பித்தது.

ஹைகோர்ட் உத்தரவு
இந்த உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் உள்துறை அமைச்சகத்தின் லுக் அவுட் நோட்டீஸுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. அத்துடன் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்லவும் அனுமதித்தது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு
ஆனால் இந்த தடைக்கு எதிராக சிபிஐ உச்சநீதிமன்றம் சென்றது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம், கார்த்தி சிதம்பரத்தை கடுமையாக விமர்சித்தது. அவர் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகத்தான் வேண்டும் என உத்தரவிட்டது. அப்போது கார்த்தி சிதம்பரம் தரப்பில் பாதுகாப்பு தரவும் கோரப்பட்டது. இதனை ஏற்று விசாரணையின் போது ஒரு வழக்கறிஞரை வைத்து கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதித்திருந்தது.

விசாரணைக்கு ஆஜராக வேண்டும்
மேலும் சென்னை உயர்நீதிமன்றம் லுக் அவுட் நோட்டீஸுக்கு பிறப்பித்த தடைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதனால் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல முடியாமல் சிபிஐ விசாரணையை எதிர்கொள்ளாக வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது.

வரும் 23-ல் ஆஜராக உத்தரவு
இந்நிலையில் வரும் 23-ந் தேதி சிபிஐ முன்பாக கார்த்தி சிதம்பரம் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அன்றைய தினம் கார்த்தி சிதம்பரம் விசாரணைக்கு ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications