40 சதவீத இளைஞர்களை கொண்ட நாட்டுக்கு கிடைப்பது என்னவோ கருணாநிதி, அச்சுதானந்தன்கள்தான்!
டெல்லி: 40 சதவீதம் இளைஞர்கள் கொண்ட இந்திய நாட்டில், பல்வேறு மாநிலங்களிலும் வயது முதிர்ந்தவர்களைத்தான் பல கட்சிகளும் முதல்வர் வேட்பாளராக முன்னிருத்தியுள்ளன. இவர்களால் இளைஞர்களின் பிரச்சினையை புரிந்து நடக்க முடியுமா என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது.
லோக்சபா தேர்தலின்போது இளைஞர்களை குறிவைத்து காய் நகர்த்திய நரேந்திர மோடியும், டெல்லி சட்டசபை தேர்தலில் இளைஞர்களை குறி வைத்த அரவிந்த் கேஜ்ரிவாலும் அமோக வெற்றி பெற்று அசத்தினர்.
இதையடுத்து காங்கிரஸ் கட்சியும் தனது 69 வயதாகும் தலைவர் சோனியாகாந்திக்கு பதிலாக அவரது மகன் ராகுல் காந்திக்கு தலைவர் பதவியை தர ஆயத்தமானது.

சோனியாதான்
இதற்கான நகர்வாக, 2013ம் ஆண்டில் ராகுல் காந்தி காங்கிரசின் துணை தலைவராக முடிசூட்டப்பட்டனர். ஆனாலும், சோனியாவே இன்னும் தலைவர்.

அடம் பிடிக்கும் அத்வானி
மோடி எழுச்சியடைந்தது தெரிந்தும், 88 வயதான அத்வானி பாஜகவில் உயர்பதவிக்காக தொடர்ந்து அடம் பிடித்து வந்தார். ஓரம் கட்டப்பட்ட நிலையிலும் கூட, இன்னமும் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவிக்கவில்லை.

தமிழகம், கேரளம்
தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடந்தும், நடக்கப்போகவும் உள்ள சூழ்நிலையில், இம்மாநிலங்களிலுள்ள பிரதான கட்சிகள் பலவற்றிலும் வயது முதிர்ந்து, உடல் உபாதைகளோடு போராடிக் கொண்டுள்ளோரே முதல்வர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அச்சுதானந்தன்
கேரளாவில் 92 வயதாகும், அச்சுதானந்தன்தான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்வர் வேட்பாளர் என்ற ஜம்பத்தோடு பிரசாரம் செய்து வருகிறார். உம்மன் சாண்டியின் காங்கிரஸ் அரசுக்கு எதிரான எதிர்ப்பலையில் கரையேறலாம் என்பது அச்சுதானந்தன் திட்டம்.

சதம் நோக்கி
இதேபோலத்தான், தமிழகத்தின் நிலைமையும் உள்ளது. 93வது வயதில் காலடி எடுத்து வைக்க உள்ள கருணாநிதிதான் திமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரது மகன் ஸ்டாலின் முதல்வர் வேட்பாளராக முன்னிருத்தப்படுவார் என யூகங்கள் நிலவிய நிலையில் அது பொய்த்துப்போயுள்ளது.

உபாதைகள்
வயோதிகத்தால் உடல் தடுமாறும் கருணாநிதி, தனது வேன் பிரசாரங்களை ரத்து செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். பேசும்போது, முன்புபோல தெளிவாக வார்த்தைகள் விழாமல் வாய் குழறுகிறது. இருப்பினும் இளைஞர்களுக்காகவும் சேர்த்து இவர் யோசித்து செயல்பட வேண்டிய முதல்வர் பதவியை நோக்கி காய் நகர்த்தியபடி உள்ளார்.

ஜெயலலிதா
69 வயதாகும் ஜெயலலிதாவும் மற்றொரு பிரதான கட்சியின் முதல்வர் வேட்பாளராக களத்தில் உள்ளார். அடிக்கடி வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்த ஜெயலலிதாவும், பிரசார காலத்தி்ல்தான் வருகிறார். அதுவும் ஹெலிகாப்டர் மார்க்கமாகவே பயணம் அமைகிறது.

அசாமிலும் அப்படித்தான்
அசாமில் முதல்வர் பதவியை தக்க வைக்க போராடும் தருண் கோகாய் வயது, 81. இதை நேரடியாக தாக்கி பிரசாரத்தின்போது பேசினார், மோடி. 53 வயாதாகும், சர்பானந்தா சோனோவால், பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் என்பது இதற்கு காரணம்.

மேற்கு வங்கம்
மேற்கு வங்கத்தின் இடதுசாரிகள் பக்கமும் ஏகப்பட்ட வயது முதிர்ந்தவர்கள்தான் உள்ளனர். இவர்களால், திரினாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தாவின் நடை வேகத்துக்கு கூட ஈடுகொடுக்க முடியவில்லை. இப்போதுதான் கொஞ்சம், கொஞ்சமாக இளைஞர்களை களமிறக்கி வருகிறது அக்கட்சி.

தலைமுறை இடைவெளி
ஒரு குடும்பத்தில் கூட 20 வயது இளைஞர்களின் ரசனையும், அவரின் தந்தை, அல்லது தாத்தாவுக்குமான ரசனையும் கூட ஒத்துப்போவதில்லை. இவ்வளவு பெரிய மாநிலத்தை ஆளும் தலைவர்கள் அந்நியமாக இருப்பது எப்படி பொருத்தமாக இருக்க முடியும். இளமை துடிப்புள்ள இந்தியா போன்ற ஒரு நாட்டுக்கும், அதன் தலைவர்களுக்குமான புரிதல் வித்தியாசம், தலைமுறைகளை தாண்டியதாகத்தான் இருக்கப்போகிறது.












Click it and Unblock the Notifications