கலைஞர் டிவி வழக்கு: அரசு சாட்சியாக கருணாநிதி மகள் செல்வி- குற்றம்சாட்டப்பட்டோராக தயாளு, கனிமொழி!!
டெல்லி: கலைஞர் டிவிக்கு ஸ்வான் நிறுவனம் ரூ200 கோடியை சட்டவிரோதமாக கொடுத்தது தொடர்பாக அமலாக்கப் பிரிவு தொடர்ந்த அன்னிய செலாவணி மோசடி வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி அரசுத் தரப்பு சாட்சியாகவும் அவரது மனைவி தயாளு அம்மாள் மற்றும் இளைய மகள் கனிமொழி ஆகியோர் குற்றம்சாட்டப்பட்டவர்களாகவும் பட்டியலிடப்பட்டுள்ளனர்.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்ற ஸ்வான் டெலிகாம் நிறுவனம், அதற்கு பிரதிபலனாக ரூ.200 கோடியை பல்வேறு நிறுவனங்கள் மூலம் கலைஞர் டிவிக்கு அளித்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இதனைத் தொடர்ந்து வாங்கிய பணத்தை கடனாக கணக்கு காட்டி கலைஞர் டிவி திருப்பி அளித்தது. இந்தப் பணப்பரிமாற்றத்தில் அன்னிய செலாவணி மோசடி நடைபெற்றுள்ளது என்பது அமலாக்கப் பிரிவின் வழக்கு.
இந்த வழக்கில் அமலாக்கப் பிரிவு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்று கடந்த மாதம் 31-ந் தேதி டெல்லி சிபிஐ நீதிமன்றம் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தது.
அமலாக்கப் பிரிவு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி, தயாளு அம்மாள், கலைஞர் டிவி முன்னாள் இயக்குநர் சரத் குமார், கலைஞர் டிவி நிர்வாகி அமிர்தம், ஷாஹித் உஸ்மான் பால்வா, வினோத் கோயங்கா, ஆசிஃப் பால்வா, ராஜீவ் பி. அகர்வால், கரீம் மொரானி ஆகிய 10 பேர் மீதும் ஸ்வான் டெலிகாம் (இப்போது எடிசலாட்), குசேகன் ரியாலிட்டி (முன்பு குசேகன் ஃபுரூட்ஸ் அன்ட் வெஜிடபிள்ஸ்), சினியூக் மீடியா என்டர்டெயின்ட்மென்ட், கலைஞர் டிவி, டைனாமிக்ஸ் ரியாலிட்டி, எவர்ஸ்மைல் கன்ஸ்டிரக்ஷன் கம்பெனி, கொன்வுட் கன்ஸ்டிரக்ஷன் அன்ட் டெவலப்பர்ஸ், டிபி ரியாலிட்டி, நிஹார் கன்ஸ்டிரக்ஷன்ஸ் ஆகிய 9 நிறுவனங்கள் ஆகியவற்றின் பெயர்கள் சேர்க்கப்பட்டிருந்தன.
இந்த வழக்கின் விசாரணை வரும் திங்கள்கிழமை முதல் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க வேண்டிய அரசுத் தரப்பு சாட்சிகளின் பட்டியல் அமலாக்கப் பிரிவு சார்பில் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நேற்று முன் தினம் அளிக்கப்பட்டுள்ளது.
அதில், இடம்பெற்றவர்கள் விவரம்:
கலைஞர் டிவி பிரதிநிதி ஜி. ராஜேந்திரன், பெங்களூர் ஜிஜிஐஎல் நிறுவனத்தின் எஸ். ஆனந்த பிரசாத், இந்தியா சிமெண்ட்ஸ் ஆர். முரளிதர், சென்னை எஸ்எம்ஐஎல் நிறுவனத்தின் என். கோபாலகிருஷ்ணன்,
மத்தியத் தொலைத் தொடர்புத் துறை முன்னாள் துணைத் தலைமை இயக்குநர் ஏ.கே. ஸ்ரீவாஸ்தவா, மும்பை டிபி ரியாலிட்டியின் வினோத்குமார் புத்திராஜா, கொல்கத்தாவைச் சேர்ந்த அனில் குமார் கெம்கா, ராஜ்குமார் தரத், சுனில் பரேக்,
டெல்லியைச் சேர்ந்த அமித் குமார் ஜெயின், சென்னை மைன்ட் ஸ்பேஸ் கன்சல்டிங் நிறுவனத்தின் சி. சுப்பிரமணியன், சென்னை எஸ்எம்ஐஎல் நிறுவனத்தின் இயக்குநர் ஆர். ஷியாம் குமார்,
டெல்லியைச் சேர்ந்த் ஆசீர்வாதம் ஆச்சாரி (ஆ.ராசாவின் முன்னாள் செயலர்), சென்னையைச் சேர்ந்த எஸ். செல்வி (கருணாநிதி மகள்) , கொல்கத்தா வழக்கறிஞர் ஏ.கே. உபாத்யாய்,
சென்னையைச் சேர்ந்த டி.சிவசுப்பிரமணியன், மத்திய அமலாக்கத் துறை இணை இயக்குநர் ஹிமான்ஷு குமார் லால், துணை இயக்குநர் டாக்டர் ராஜேஷ்வர் சிங்,
உதவி இயக்குநர்கள் சத்யேந்திர சிங், கமல் சிங், வழக்குத் தொடர்ந்த போது விசாரணை அதிகாரியாக இருந்த புகார்தாரர் டாக்டர் பிரபாகாந்த் ஆகியோரின் பெயர்கள் சாட்சிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.