ஏதோ பெரிசா நடக்க போகுது.. அச்சத்தால் பெட்ரோல் பங்க், ஏடிஎம் மையங்களில் குவியும் காஷ்மீர் மக்கள்
Recommended Video
ஸ்ரீநகர்: அமர்நாத் யாத்ரீகர்களும் சுற்றுலா பயணிகளும் வெளியேறுமாறு அரசு அறிவித்ததை அடுத்து பெட்ரோல் பங்க்குகள், ஏடிஎம்களில் கூட்டம் அலைமோதுகிறது.
காஷ்மீரில் உள்ள அமர்நாத் லிங்கத்தை தரிசிக்க வரும் பக்தர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத் துறைக்கு தகவல்கள் கிடைத்தன.
இதையடுத்து காஷ்மீரில் உள்ள அமர்நாத் யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் உடனே சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்லுமாறு மாநில அரசு அறிவுரை வழங்கியுள்ளது.
சிறப்பு அந்தஸ்து
இதனால் காஷ்மீரில் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் பள்ளத்தாக்கு பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வேறு ரத்து என வதந்தி பரவி வருகிறது.
பெட்ரோல் பங்க்
அமர்நாத் யாத்ரீகர்களை விரைந்து வெளியேறுமாறு மாநில அரசு அறிவுறுத்தியுள்ளதை அடுத்து ஏதோ விபரீதம் உள்ளது என மக்கள் அஞ்ச தொடங்கிவிட்டனர். இதையடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் பெட்ரோல் பங்க்களில் கூடியுள்ளனர்.
குழப்பமான சூழல்
மத்திய காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தில் மக்கள் பெட்ரோல், டீசலை வாங்க பெரிய பெரிய கேன்களை கொண்டு செல்கின்றனர். இதே நிலைதான் ஏடிஎம் வாசல்களிலும் காணப்படுகிறது. பெட்ரோல் நிலையங்களிலும் ஏடிஎம் வாசல்களிலும் குழப்பமான சூழலே நிலவுகிறது.
மனநிலை
இதனால் ஏடிஎம் மையங்களில் பணம் இல்லாத நிலையும், பெட்ரோல் பங்க்குகள் மூடும் நிலையும் உள்ளது. இதுகுறித்து காஷ்மீர்வாசிகள் கூறுகையில் எங்களை எப்போதும் பதற்றமான மனநிலையிலேயே வைத்துள்ளனர்.
அச்சம்
இது போன்ற அறிவுரைகளால் நாங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளோம். ஒட்டுமொத்த மக்களையும் நெருக்கடிக்குள்ளான இது போன்றவைகள் நடப்பதாக சிலர் நம்புகின்றனர். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இதனால் ஏதோ பெருசாக நடைபெற போகிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளதாக மக்கள் கூறினர்.