கச்சத்தீவை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை: கருணாநிதி வழக்கில் மத்திய அரசு பதில்
டெல்லி: கச்சத்தீவை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய அரசு உறுதியாக தெரிவித்துவிட்டது.
1974 மற்றும் 1976 ஆகிய ஆண்டுகளில் இந்திய இலங்கை இடையிலான கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்து கச்சத்தீவை இந்தியா திரும்பப்பெற மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனு குறித்து பதில் அளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்துள்ள மத்திய அரசு, கச்சத்தீவை திரும்ப பெறும் பேச்சுக்கே இடம் இல்லை என்று கூறியுள்ளது.

அத்துடன் இலங்கையுடனான ஒப்பந்தத்தை திரும்ப பெறமுடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 1974 ம் ஆண்டு கடல் எல்லையை வரையறை செய்த போது கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமாகிவிட்டது என்றும் கச்சத்தீவை தாரைவார்க்கவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.
கச்சத்தீவில் மீன்பிடிக்க தமிழக மீனவர்களுக்கும் உரிமை இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், கருணாநிதியின் மனுவில் பொதுநலன் இருப்பதாக தெரியவில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications