14 வருடங்கள் கழித்து சந்திரசேகர ராவ்-சந்திரபாபு நாயுடு திடீர் சந்திப்பு! ஆந்திரா அல்லோகலம்

ஹைதராபாத்தில் நால்சார் பல்கலைக்கழக விழாவில் பங்கேற்க நேற்று குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அந்த நகருக்கு விமானம் மூலமாக வந்தார். ஜனாதிபதியை வரவேற்க தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் 30 நிமிடம் முன்னதாக விமான நிலையம் வந்து விட்டார். ஆளுநர் நரசிம்மனுடன் சேர்ந்துஸ பிரணாப் முகர்ஜியை, சந்திரசேகர ராவ் வரவேற்றார்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் ஜனாதிபதியை வரவேற்க விமான நிலையம் வந்தார். அவரையும் மாநில முதல்வர் என்கிற வகையில், சந்திரசேகரராவ் வரவேற்றார். இருவரும் ஒருவரையொருவர் கை குலுக்கி கொண்டனர்.
பத்திரிகை மற்றும் டி.வி. புகைப்படக்காரர்கள் இவர்கள் சந்திப்பை போட்டி போட்டு படம் எடுத்தனர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நண்பர்களாக இருந்து அரசியல் எதிரிகளாக மாறிய சந்திரபாபு நாயுடுவும், சந்திரசேகரராவும் 14ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து பேசியதே இந்த பரபரப்புக்கு காரணம் ஆகும்.
சந்திரசேகரராவ் முதலில் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்தார். சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்த போது சந்திரசேகரராவுக்கு அமைச்சர் பதவி கொடுக்க வில்லை.
இதனால் அதிருப்தி அடைந்த சந்திரசேகரராவ், தெலுங்கு தேசத்தில் இருந்து விலகி, 2000மாவது ஆண்டில், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி என்ற கட்சியை தொடங்கினார். முதல்வரான பிறகுதான் சட்ட சபைக்குள் செல்வேன் என்று சபதம் செய்தார். பின்னர் தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் குதித்தார். அப்போது அவர் சந்திர பாபுநாயுடுவை கடுமையாக விமர்சித்து பேசினார்.
அரசியலில் எலியும், பூனையுமாக இருந்த இருவரும் 14 ஆண்டுளுக்கு பிறகு சந்தித்து கைகுலுக்கி கொண்டதுடன் கவர்னருடன் அமர்ந்து நீண்ட நேரம் சிரித்து பேசிக் கொண்டு இருந்தது அங்கிருந்தவர்களை ஆச்சரியப்பட வைத்தது. பல்கலைக்கழக நிகழ்ச்சியை முடித்து விட்டு டெல்லி திரும்பிய ஜனாதிபதியை வழியனுப்ப சந்திர பாபுநாயுடு மீண்டும் விமான நிலையம் வந்தார். அப்போதும் இரு முதல்வர்களும் சந்தித்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications