அருண் ஜெட்லிக்கு எதிராக வழக்கு- கீர்த்தி ஆசாத்
டெல்லி: டெல்லி கிரிக்கெட் சங்க (டிடிசிஏ) முறைகேடு வழக்கு தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மீதும், இந்த வழக்கை மந்த கதியில் விசாரித்து வரும் சிபிஐ மீதும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் போவதாக பாஜகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி. கீர்த்தி ஆஸாத் தெரிவித்தார்.
இதுகுறித்து டெல்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறியதாவது:

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீதும், என் மீதும் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கைத் தொடுக்க டெல்லி கிரிக்கெட் சங்க அதிகாரிகளுக்கு அருண் ஜெட்லி ரகசியக் கடிதம் எழுதி உள்ளார். டெல்லி கிரிக்கெட் சங்கத்துக்கு தொடர்பு இல்லாதவர் (ஜெட்லி) சங்கம் எப்படிச் செயல்பட வேண்டும் என்று அறிவுறையும் வழங்கியுள்ளார்.
கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட என்னை பாஜக மீண்டும் இணைத்துக் கொள்ளும்.
ஏற்கெனவே, நீதிபதி முகுல் முத்கல் வெளியிட்ட அறிக்கையைக் கொண்டு, அருண் ஜெட்லி மற்றும் மத்திய அரசுக்கு எதிராகவும், வழக்கை மந்த கதியில் விசாரித்து வரும் சிபிஐக்கு எதிராகவும் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்ய உள்ளேன்.
குறிப்பிட்ட காலத்துக்குள் டிடிசிஏ முறைகேடு வழக்கை விசாரிக்க உத்தரவிடுமாறு அந்த மனுவில் குறிப்பிட உள்ளேன்.
கூண்டில் அடைக்கப்பட்ட கிளிபோல் உள்ள சிபிஐ, நீதிமன்றம் உத்தரவிட்டால்தான் தனது பணியை தொடங்கும் என்று தெரிகிறது," என்று கீர்த்தி ஆஸாத் தெரிவித்தார்.
அருண் ஜெட்லி மீது தொடர்ந்து குற்றச்சாட்டு கூறி வந்ததால் கட்சியிலிருந்து சமீபத்தில்தான் கீர்த்தி ஆஸாத்தை பாஜக இடைநீக்கம் செய்தது.












Click it and Unblock the Notifications