மீண்டும் 'ஜனதா தர்பார்' நடத்திய டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்!!
டெல்லி: டெல்லியில் 2வது முறை முதல்வராகியுள்ள அரவிந்த் கேஜ்ரிவால் இன்று முதலாவது பொதுமக்களின் குறைகேட்பு கூட்டமாகிய ஜனதா தர்பாரை நடத்தினார்.
டெல்லியில் கடந்த ஆண்டு முதல்வராக பதவி வகித்த அரவிந்த் கேஜ்ரிவால், டெல்லிவாசிகளின் குறைகளை நேரடியாகக் கேட்டு, அவற்றுக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கை எடுப்பதற்காக ஜனதா தர்பார் நடத்தப்படும் என கூறியிருந்தார்.
இதன்படி ஒன்றிரண்டு ஜனதா தர்பார் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஆனால் இந்த நிகழ்ச்சிகளுக்கு பல்லாயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் திரண்டதால் அசம்பாவிதம் ஏதும் நடைபெறுமோ என்ற அச்சம் நிலவியது.

இதனைத் தொடர்ந்து ஜனதா தர்பார் நிகழ்ச்சிகளையே ரத்து செய்வதாக அரவிந்த் கேஜ்ரிவால் அறிவிக்க நேரிட்டது.
தற்போது தனிப்பெரும்பான்மையுடன் டெல்லியில் மீண்டும் ஆட்சி அமைத்திருக்கிறார் அரவிந்த் கேஜ்ரிவால். அவர் இன்று காசியாபாத்தில் உள்ள ஆம் ஆத்மி தலைமையகத்தில் பொதுமக்களின் குறைகளைக் கேட்கும் ஜனதா தர்பார் நிகழ்ச்சியை நடத்தினார்.
கடந்த முறை போல மிகப் பெரியளவிலான கூட்டம் இல்லையென்றாலும் கணிசமான அளவு பொதுமக்கள் குவிந்திருந்தனர். அனைவரும் பலத்த சோதனைகளுக்குப் பின்னர் அனுமதிக்கப்பட்டனர்.
இன்றைய ஜனதா தர்பார் நிகழ்ச்சி அமைதியான முறையிலேயே நடைபெற்றது. இந்நிகழ்ச்சி 3 நாட்களுக்கு தொடர்ந்து நடத்தப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications