மும்பையில் 'மொய் விருந்துக்கு' கேஜ்ரிவால் ஏற்பாடு! ஒரு பிளேட்டுக்கு ரூ.20 ஆயிரம் மட்டுமே!
மும்பை: ஆம் ஆத்மி கட்சி தனது தேர்தல் நிதிக்காக மும்பையில் இன்று சின்னகவுண்டர் படத்தில் வரும் சுகன்யா கேரக்டரை போல சாப்பாடு போட்டு மொய் விருந்து வசூலிக்க உள்ளதாம். ஆனால் ஒரு சாப்பாட்டுக்கு ரூ.20 ஆயிரம் என்று அரவிந்த் கேஜ்ரிவால் நிர்ணயித்துள்ளார்.
டெல்லியில் அடுத்த ஆண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆட்சியை பிடிக்க ஆம் ஆத்மி மும்முரம் காண்பிக்கிறது. இதையடுத்து கட்சிக்கு நிதி திரட்டும் நோக்கில் மும்பையில் இன்று இரவு மொய் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவாலும் இதில் பங்கேற்கிறார்.
பாலிவுட் கலைஞர்கள், வங்கியாளர்கள், வைர வியாபாரிகளுக்கு விருந்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுல்ளது. மொத்தம் 200 பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில் இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு சாப்பாட்டுக்கு குறைந்தது ரூ.20 ஆயிரம் தர வேண்டும் என்பது நிபந்தனை. இந்த மொய் விருந்தில் சுமார் ரூ.40 ல்டசம் வசூலாகும் என்று ஆம் ஆத்மி எதிர்பார்க்கிறது.
இதனிடையே டெல்லியில் செய்தியாளரிடம் பேசிய பாஜக தலைவர்களில் ஒருவரான ஜி.வி.எல்நரசிம்மராவ், "ஆம் ஆத்மிக்கு அருமையான ஒரு வாய்ப்பு தரப்பட்டது. ஆனால் மக்களை அவர்கள் ஏமாற்றிவிட்டனர். சந்தர்ப்பவாதிகள் என்பதை காங்கிரசோடு கூட்டணி வைத்து நிரூபித்துவிட்டனர். இதற்கு முன்பும் மொய் விருந்தில் மக்கள் பணத்தை கொட்டி கொடுத்தனர். ஆம் ஆத்மி தங்களுக்கு ஏதாவது நல்லது செய்யும் என்று அவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய ஆம் ஆத்மி தவறிவிட்டது" என்றார்.