கெஜ்ரிவால் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இசட் பிளஸ் பாதுகாப்பு
டெல்லி: ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்படுவது குறித்து தான் இனி செய்திகள் வர உள்ளன. டெல்லி முதல்வராக பதவியேற்க உள்ள கெஜ்ரிவால் இசட் பிளஸ் பாதுகாப்பை ஏற்க மாட்டார் என்று ஆம் ஆத்மி கட்சி தலைவர் குமார் விஷ்வாஸ் தெரிவித்துள்ளார்.
கெஜ்ரிவால் பாதுகாப்பு வேண்டாம் என்றாலும் அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்படும். அந்த பாதுகாப்பு தனி நபருக்கு அல்ல மாறாக அவர் வகிக்கும் பதவிக்கு அளிக்கப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த முறையும்:
கடந்த முறை கெஜ்ரிவால் முதல்வர் ஆனபோதும் இசட் பிளஸ் பாதுகாப்பை ஏற்க மறுத்துவிட்டார். இருப்பினும் அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. முதல்வரை பாதுகாப்பது தங்களின் பொறுப்பு என்று காசியாபாத் போலீசார் தெரிவித்தனர்.
இம்முறையும் அவ்வாறே கெஜ்ரிவாலுக்கு பாதுகாப்பு அளிக்க உள்ளோம் என காசியாபாத் போலீசார் தெரிவித்துள்ளனர். அவரை தற்போது பாதுகாக்கும் பணியில் 10 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 60 கான்ஸ்டபிள்கள் ஈடுபட்டுள்ளனர்.
அவர் முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு வந்தவுடன் இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்படும்.
உள்துறை அமைச்சகம்
கெஜ்ரிவால் தனக்கு பாதுகாப்பு வேண்டாம் எனலாம். ஆனால் இது குறித்த இறுதி முடிவை மத்திய உள்துறை அமைச்சகம் தான் எடுக்க வேண்டும். முதல்வருக்கு இருக்கும் அச்சுறுத்தலை பொறுத்து அவருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பின் தன்மை முடிவு செய்யப்படும். கெஜ்ரிவால் நக்சலைட்டுகள் உள்பட யாரின் தாக்குதல் பட்டியலில் இல்லாவிட்டாலும் அவரை கடத்தவோ, கொலை செய்யவோ முயற்சிக்கலாம்.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்
கெஜ்ரிவால் கடத்தப்பட்டால் அதற்கு காரணம் அவரது பதவியாகத் தான் இருக்கும். அவர் முதல்வர் என்பதால் கடத்தி பணம் கேட்கலாம். கெஜ்ரிவால் அடிக்கடி மக்களை சந்திப்பவர். அதனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார்.
பாதுகாப்பு செலவு
இந்தியாவில் நான்கு வகை பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. அவை இசட், எக்ஸ், ஒய் மற்றும் இசட் பிளஸ். இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க மாதத்திற்கு ரூ.10 கோடியும், இசட் பாதுகாப்புக்கு ரூ.6 கோடியும் செலவாகிறது.
கெஜ்ரிவாலின் வீட்டை 10 கான்ஸ்டபிள்கள் பாதுகாப்பார்கள். இது தவிர பிற படைகளைச் சேர்ந்த 30 பேர் அவரை எந்நேரமும் பாதுகாப்பார்கள்.