கூட்டுறவு வங்கிகளில் செல்லாத நோட்டை மாற்ற முடியாது.. தடையை நீக்க கேரளா சட்டப்பேரவையில் தீர்மானம்
கூட்டுறவு வங்கிகளில் செல்லாத ரூபாய் நோட்டை மாற்றுவதற்குள்ள தடையை நீக்க கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவனந்தபுரம்: கூட்டுறவு வங்கிகளில் செல்லாத ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்குள்ள தடையை நீக்க வேண்டும் என்று கோரி கேரள சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மத்திய அரசு அறிவித்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கி மற்றும் அஞ்சலகங்களில் மட்டுமே கொடுத்து மாற்றிக் கொள்ள முடியும். அதிக அளவில் விவசாய மக்களால் பயன்படுத்தப்படும் கூட்டுறவு வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ள முடியாது. இதற்கு மத்திய அரசும் இந்திய ரிசர்வ் வங்கியும் அனுமதிப்பதில்லை. இதனால் அதிக அளவில் விவசாய பெருங்குடி மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், கூட்டுறவு வங்கிகளில் பழைய செல்லாத நோட்டுக்களை மாற்றுவதற்குள்ள தடையை நீக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி கேரள சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, இந்தக் கோரிக்கை வலியுறுத்தி அம்மாநில முதல்வர் பினராய் விஜயன், சக அமைச்சர்களோடு திருவனந்தபுரத்தில் உள்ள ரிசர்வ் வங்கியின் வாசல் முன் ஒரு நாள் முழுவதும் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து, அனைத்துக் கட்சிக் கூட்டம் கேரளாவில் நடைபெற்றது. தொடர் நடவடிக்கையடுத்து இன்று அமைச்சரவை ஒப்புதலோடு இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து அம்மாநில முதல்வர் பினராய் விஜயன், கிராமப் புற பொருளாதாரம் கூட்டுறவு வங்கிகளையே சார்ந்துள்ளது என்றும், பெரும்பாலான விவசாய மக்களிடம் உள்ள பழைய செல்லாத நோட்டுக்களை மாற்ற முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள் என்றும் தெரிவித்தார்.
இந்தத் தீர்மானத்தை வழக்கம் போல அம்மாநில பாஜகவினர் எதிர்த்தனர். மேலும், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியை கடுமையாக சாடினார்கள்.












Click it and Unblock the Notifications