142 அடியை எட்டிய முல்லைப் பெரியாறு அணை... வயிற்றெரிச்சலில் மீண்டும் சுப்ரீம் கோர்ட் போகிறது கேரளா!!
டெல்லி: முல்லைப் பெரியாறு அணை மீண்டும் 142 அடியை எட்டுவதால் கூடுதல் நீரை தமிழக அரசு வெளியேற்றி வருகிறது. ஆனால் நீர் திறப்பதற்கு முன்னதாக தங்களுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ள கேரளா உச்சநீதிமன்றத்தில் இதுகுறித்து முறையிடப் போவதாக கூறியுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்தது. இதனால் அணையின் நீர்மட்டும் கிடுகிடுவென உயர்ந்தது.

அணையின் நீர்மட்டம் 141 அடியை தாண்டி உச்சநீதிமன்றம் அனுமதித்த அளவான 142 அடியை எட்டிக் கொண்டிருக்கிறது. இதனால் அணையில் இருந்து கடந்த சில நாட்களாக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இன்று காலை அணையின் நீர்மட்டம் 141.67 அடியாக இருந்தது. இன்று வினாடிக்கு 2,100 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி நீரை தேக்க கேரளா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இதனை எதிர்த்து தமிழகம் தொடர்ந்த வழக்கில் கடந்த 2014ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி நீரைத் தேக்கலாம் என அனுமதி அளித்தது. இதன்படி கடந்த ஆண்டும் 142 அடிக்கு நீர் தேக்கப்பட்டது. இதேபோல் தற்போதும் 142 அடியை எட்டும் நிலையில் நீர் தேக்கப்பட்டு வருகிறது. இது கேரளாவை வயிற்றெரிச்சல் பட வைத்துள்ளது.
இது தொடர்பாக கேரளா சட்டசபையிலும் விவாதம் நடைபெற்றது. அப்போது முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பாக பிரதமரை விரைவில் உம்மன்சாண்டி சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையில் நீரை திறப்பதற்கு 12 மணி நேரத்துக்கு முன்னதாக தங்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுக்கவில்லை என புது புகாரை முன்வைக்கிறது கேரளா.
இதனால் உச்சநீதிமன்றத்தை நாடப்போடவதாகவும் கேரளா தெரிவித்துள்ளது. இது குறித்து கேரளா முதல்வர் உம்மன்சாண்டி கூறுகையில், தமிழகம் கேரளாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தமிழகம் இணக்கமான ஒரு சூழ்நிலையில் இல்லை என கூறியிருந்தார்.
கேரளா நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பி.ஜே. ஜோசப், முல்லைப் பெரியாறு அணையில் நீரை திறந்துவிடுவதற்கு 12 மணிநேரத்துக்கு முன்னதாக கேரளாவுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும். ஆகையால் இதை தமிழகம் பின்பற்றவில்லை. இது குறித்து மத்திய நீர்வள ஆணையத்திடம் முறையிட்டுள்ளோம். விரைவில் உச்சநீதிமன்றத்தையும் நாட உள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications