முல்லைபெரியாறு அணை 142 அடி: கேரளாவில் அனைத்து கட்சி கூட்டம்
திருவனந்தபுரம்: முல்லை பெரியார் அணையின் நீர் மட்டம் 142 அடியை எட்டி உள்ள நிலையில், இப்பிரச்னை குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க, வரும் 26ம் தேி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, ஆலோசனை நடத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது.
திருவனந்தபுரத்தில், முதல்வர் உம்மன்சாண்டி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகம் - கேரளா இடையே நீண்ட கால பிரச்சினையாக இருந்து வரும் முல்லைபெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து 142 அடி தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது.

பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்த்தப்பட்டுள்ளதன் மூலம் தங்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்று தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆனால் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீரை தேக்குவதற்கு கேரள அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது.
பெரியாறு அணையை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரவே கேரள அரசு இந்த செயல்களில் ஈடுபட்டு வருவதாக தேனி மாவட்ட விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
பெரியாறு அணை உடைந்தால் தண்ணீர் முழுவதும் இருபுறமும் மலைகளுக்கு இடையே 48 கி.மீ தூரம் சென்று கடைசியில் இடுக்கி அணையை தான் அடையும் என்று நிபுணர் குழு ஏற்கனவே உறுதிபடுத்தியுள்ளது.
கடந்த 1979ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரும், கேரள முதல்வர் முகம்மதுகோயாவும் அணையை பலப்படுத்தும் வரை நீர்மட்டத்தை 136 அடியாக குறைப்பது என ஒப்பந்தம் செய்தனர். அதன்பின்னர் 3 கட்டங்களாக பெரியாறு அணை பலப்படுத்தப்பட்டது.
அணையின் உறுதித்தன்மையை மத்திய அரசின் நீர்வள ஆணையமும் உறுதி செய்தது. ஆனால் அணையின் நீர்மட்டத்தை பழைய நிலைக்கு உயர்த்தவிடாமல் இதுநாள் வரை கேரள அரசு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. அந்த தடைகளையும் தாண்டி அணை நீர்மட்டம் 142 அடியை எட்டியுள்ளது.
இதனால் அணை பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் மூழ்கத்தொடங்கியுள்ளன. இதுநாள்வரை அணை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களை காப்பாற்றவும், அணையின் முழுகட்டுப்பாட்டினையும் தனது நிர்வாகத்திற்குள் கொண்டுவரவும் கேரள அரசு குறுக்குவழியை கையாண்டது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
தேசிய அணைகள் பதிவேட்டில் பெரியாறு அணை கேரள அணைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது. அணையில் மின்வசதி வல்லக்கடவு வழியாக சாலை அமைக்கவிடாமல் அம்மாநில வனத்துறையினர் எதிர்த்து வருகின்றனர். அணையின் நீர்பிடிப்பு பகுதியான ஆனவச்சால் அருகே சுற்றுலா பயணிகள் வாகனம் நிறுத்தம் அமைக்கப்பட்டது. இதற்கு பசுமைதீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.
இந்த நிலையில், முல்லை பெரியார் அணையின் நீர் மட்டம் 142 அடியை எட்டி உள்ள நிலையில், திருவனந்தபுரத்தில், முதல்வர் உம்மன்சாண்டி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
அதில் இப்பிரச்னை குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க, வரும் 26ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications