ரயில் புறப்பட தாமதமானதால் தலைமைச் செயலகத்திற்கு நடந்தே சென்ற கேரள முதல்வர்!
திருவனந்தபுரம்: ரயில் புறப்பட காலதாமதம் ஆனதால், பிளாட்பாரத்தில் இறங்கி பொதுமக்களோடு நடக்க ஆரம்பித்துள்ளார் கேரள முதல்வர் உம்மன் சாண்டி.
முதல்வர் என்பவர் மக்களின் சேவகன். ஆனால் முதல்வரை மக்களின் தலைவர் என்பதை போலவும், கடவுள் என்பதை போலவும் மாற்றி வைத்துள்ளதன் விளைவு, இப்போது சாமானிய நிகழ்வுகளும் செய்தி முக்கியத்துவம் பெறுகின்றன. அதுபோன்றதுதான் கேரள முதல்வரின் ஒரு செயலும்.

கேரள முதல்வர் உம்மன் சாண்டி, மலப்புரம் பகுதியில் கட்சி பிரச்சார பணியாற்றிவிட்டு, நேற்று தலைநகர் திருவனந்தபுரத்திற்கு ரயிலில் திரும்பிக்கொண்டிருந்தார். அவர் பயணித்த மாவலி எக்ஸ்பிரஸ் ரயில், பெட்டா ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்த பிறகு 40 நிமிடங்களாக புறப்படவேயில்லை.
விசாரித்தபோது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக, அந்த மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது தெரியவந்தது. இதையறிந்ததும், உம்மன் சாண்டி உடனடியாக ரயிலில் இருந்து கீழே இறங்கி, பொதுமக்களோடு, ஒருவராக பிளாட்பார்மில் நடக்க ஆரம்பித்துவிட்டார்.
அந்த ரயில் நிலையத்தில் இருந்து தலைமைச் செயலகம் 3 கி.மீ தொலைவில் உள்ளது. எனவே நடந்தே சென்று தலைமை செயலகத்தில் ஏற்பாடு செய்திருந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்க உம்மன் சாண்டி முடிவு செய்திருந்தாராம்.
ஆனால், முதல்வர், திருவனந்தபுரம் சென்டிரல் ரயில் நிலையத்தில் இறங்குவதற்கு பதிலாக, பெட்டா ரயில் நிலையத்தில் இறங்கிய தகவல் கிடைத்ததும், முதல்வர் அலுவலகம் சார்பில் திருவனந்தபுரம் சென்டிரல் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் அங்கு அனுப்பப்பட்டது. பிறகு அதில் ஏறி உம்மன் சாண்டி தலைமை செயலகம் சென்றடைந்தார்.
இதன்மூலம், குறிப்பிட்ட நேரத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.












Click it and Unblock the Notifications