கோழிக்கோட்டில் விமானம் தரையிறங்கிய போது நொறுங்கி விபத்து.. 18 பேர் பலி.. 123 பேர் காயம்
கோழிக்கோடு: கேரளாவின் கோழிக்கோடு நகருக்கு 184 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் உள்பட 191 பேருடன் வந்த ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளாகி இரண்டாக உடைந்தது. விமானி, துணை விமானி, குழந்தைகள் உள்பட 18 பேர் பலியாகி உள்ளனர். 123 பேர் காயம் அடைந்துள்ளனர்
Recommended Video
இந்த கோர விபத்தில் 123 பேர் காயமடைந்துள்ளனர். 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக மலப்புரம் மாவட்ட எஸ்பி தகவல் தெரிவித்துள்ளார்.
ஏர் இந்தியா விமானம் (1X -1344) துபாயில் இருந்து 184 பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் உள்பட 191 பேரை ஏற்றிக் கொண்டு கேரளாவின் கோழிக்கோடு நகருக்கு இன்று இரவு வந்தது. இந்த விமானம் இன்று இரவு 7.45 மணிக்கு கோழிக்கோட்டில் உள்ள கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கியது.
18 பேர் பலி
இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில் விமானம் விபத்துக்குள்ளானபோது அதிலிருந்து தீ மற்றும் கரும்புகை வந்தது என்று தெரிவித்தனர். இந்த விமான விபத்ததில் விமானி , துணை விமானி உள்பட 16 பேர் பலியாகி உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 123 பயணிகள் காயமடைந்துள்ளனர். 13 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வந்தே பாரத் விமானம்
வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் படி மத்திய அரசால் இந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் துபாயில் இருந்து கோழிக்கோடுக்கு இயக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் 174 பயணிகள், 10 குழந்தைகள், 4 விமான பணி பெண்கள், 2 விமானிகள் என மொத்தம் 191 பேர் இருந்துள்ளனர். விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த பயணிகள், ஊழியர்களின் பெயர் விவரமும் வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் வந்துள்ளனர்.
மீட்பு பணியில் பேரிடர் குழு
24 ஆம்புலன்ஸ்கள் கரிப்பூர் விமான நிலையத்திற்கு விரைந்துள்ளன. காயமடைந்தவர்களை அவை மீட்டு வருகின்றன. மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். மலப்புரம், கோழிக்கோடு ஆகிய இரு மாவட்ட கலெக்டர்கள் மீட்புப் பணிகளை நேரில் பார்வையிட்டு முடுக்கிவிட்டனர். இறுதியாக விபத்தில் சிக்கிய அனைவரும் மீட்கப்பட்டனர். மீட்பு பணிகள் நிறைவடைந்தது. விமான விபத்தில் சிக்கியவர்கள் குறித்து தகவல்கள் அறிய விமான நிலைய கட்டுப்பாட்டு அறை எண் 0483-2719493 ஐ தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கவனம் தேவை
கரிபூர் விமான நிலையத்தில் உள்ள ஓடுபாதை டேபிள் டாப் ஓடுபாதையாகும், அதாவது ஒரு சிறிய மலையின் மேல் ஒன்று அல்லது இரண்டு முனைகளுடன் அமைந்துள்ள விமான ஓடுதளம் இது. இந்த வகை ஓடுபாதையில் மிக கவனமாக விமானங்கள் தரையிறங்க வேண்டும். இதற்கு பைலட் மிகத் துல்லியமான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும்.
விமானிகளுக்கு சவால்
2010 ஆம் ஆண்டு மங்களூர் விமான நிலையத்தில் உள்ள இதேபோன்ற ஓடுதளத்தில் ஏற்பட்ட விபத்தில் 158 பேர் உயிரிழந்தனர், இதையடுத்து வல்லுநர்கள் குழு வெளியிட்ட அறிக்கையில், கோழிக்கோட்டில் உள்ள கரிபூர் விமான நிலையம் மற்றும் மிசோரத்தில் உள்ள லெங்புய் விமான நிலையம் உள்ளிட்ட டேபிள் டாப் ஓடுதளங்களைக் கொண்ட விமானநிலையங்களில் விமானங்களை தரையிறக்க பைலட்களுக்கு கூடுதல் திறன் தேவை என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. "விமான நிலையத்தின் நிலப்பரப்பு மற்றும் இடத்தின் அமைவுகள் காரணமாக டேபிள் டாப் ஓடுதள விமானநிலையங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் என்றும், இல்லாவிட்டால் கடுமையான சூழ்நிலைகளுக்கு வழிவகுக்கும்" என்று அறிக்கை எச்சரிக்கப்பட்டிருந்தது.