கேரள வெள்ளம்: முல்லை பெரியாறு கண்காணிப்பு கூட்டத்தை நாளையே கூட்டவும்.. உச்ச நீதிமன்றம் உத்தரவு
கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டு இருக்கும் நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் குறித்து ஆலோசனை நடத்த முல்லை பெரியாறு கண்காணிப்பு கூட்டத்தை நாளையே கூட்ட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப
Recommended Video
டெல்லி: கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டு இருக்கும் நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் குறித்து ஆலோசனை நடத்த முல்லை பெரியாறு கண்காணிப்பு கூட்டத்தை நாளையே கூட்ட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் உச்சநீதிமன்றம் அனுமதித்த அளவான 142 அடியை எட்டியுள்ளது. கேரளாவில் கடந்த ஒரு மாதமாக பெரும் மழை பெய்து வருகிறது. அங்கு ஏற்பட்டு இருக்கும் வெள்ளம் கேரள வரலாற்றில் ஏற்படாத வெள்ளம் ஆகும்.
14 மாவட்டங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆசியாவின் பெரிய ஆர்க் அணையான இடுக்கி அணை திறக்கப்பட்டது. அதே சமயத்தில் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ள அளவான 142 அடியை முல்லைப் பெரியாறு அணை எட்டியுள்ளது.
இதையடுத்து கேரளாவில் ஏற்கனவே வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், நீர்மட்ட அளவை 139 அடியாக குறைக்குமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்தார். ஆனால் தமிழக அரசு இதில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் கேரளாவில் வெள்ள நிலைமை மோசமாக இருப்பதால், நீர் மட்ட அளவை 139 அடியாக குறைக்குமாறு உச்சநீதிமன்றத்தில் இடுக்கியை சேர்ந்த ரசூல் ராயின் வழக்கு தொடுத்தார். அவசர வழக்காக இன்றே உச்சநீதிமன்ற நீதிபதிகள் இதை விசாரித்தனர்.
விசாரணையின் முடிவில், முல்லை பெரியாறு கண்காணிப்பு குழு கூட்டத்தை நாளையே கூட்ட வேண்டும். முல்லைப்பெரியாறு அணையின் நீர்தேக்க அளவை குறைப்பது பற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். 139 அடியாக குறைப்பது குறித்து ஆலோசித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.