கேரளா வெள்ளம்: மிக மோசமான மழை முடிவிற்கு வந்துள்ளது.. ஆறுதல் அளிக்கும் தமிழ்நாடு வெதர்மேன்
கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டு இருக்கும் நிலையில் இன்றில் இருந்து அங்கு படிப்படியாக மழை குறையும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்: கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டு இருக்கும் நிலையில் இன்றில் இருந்து அங்கு படிப்படியாக மழை குறையும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் ஏற்பட்டு இருக்கும் வெள்ளம் அவர்கள் வரலாற்றில் ஏற்படாத வெள்ளம் ஆகும். 14 மாவட்டங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மீட்பு பணிகள் நடந்து வருகிறது. ராணுவத்தினர் அங்கு மீட்பு பணியில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.
இதுவரை கேரளா வெள்ளத்திற்கு 370 பேருக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். 700க்கும் அதிகமானோர் காணாமல் போய் இருக்கிறார்கள். 1 லட்சம் பேர் அவர்கள் இருப்பிடத்தில் இருந்து மீட்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
2 கோடிக்கும் அதிகமானோர் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகிறார்கள். இந்த நிலையில் கேரளாவில் இன்றிலிருந்து மழை படிப்படியாக குறையும் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வெதர்மேன் இதுகுறித்து வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில், கேரளாவில் இன்றிலிருந்து மழை படிப்படியாக குறையும். ஒரு வாரத்திற்கு பின் இப்போதுதான் அங்கு மேகம் இல்லாமல் வானம் காட்சி அளிக்கிறது.
நாளை வரை லேசான தூரல் இருக்கும். அது எப்போதும் கேரளாவில் நடக்க கூடியதுதான். அங்கு கனமழை இருக்காது.
மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். கேரளாவிற்கான ஆபத்து முழுக்க முழுக்க நீங்கிவிட்டது. ஒடிசாவில் ஏற்படும் தாழ்வு நிலை, கேரளாவில் பாதிப்பை ஏற்படுத்தாது. கேரளாவில் கனமழை பெய்யும் என்னும் வதந்திகளை நம்ப வேண்டாம். மிகமோசமான மழை முடிவிற்கு வந்துள்ளது, என்றுள்ளார்.