தமிழ்நாடு பாணியில் கேரளா.. மசோதாக்கள் விவகாரம்-ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றம் செல்ல முடிவு!
திருவன்ந்தபுரம்: தமிழ்நாடு அரசைப் போல கேரளா மாநில அரசும் அம்மாநில ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளது. கேரளா மாநில ஆளுநராக இருக்கும் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், ஆளுநர்களுக்கு மசோதா மீது முடிவெடுக்க காலக்கெடு விதித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கடுமையாக விமர்சித்த நிலையில் கேரளா அரசு இம்முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்ரவி, தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை கிடப்பில் போட்டிருந்தார். இதனையடுத்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பைப் பெற்றது.
உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், மாநில அரசுகளின் மசோதாக்களை நீண்டகாலம் ஆளுநர்கள் கிடப்பில் போடக் கூடாது; ஆளுநர் மற்றும் ஜனாபதி ஆகியோர் மாநில மசோதாக்கள் மீது முடிவெடுக்க அதிகபட்சம் 4 மாதம் காலக்கெடு நிர்னயிக்கப்பட்டது. மேலும் ஆளுநர் நிறுத்தி வைத்த மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றமே தாமாக முன்வந்து தமக்கான சிறப்பு அதிகாரம் மூலம் ஒப்புதல் அளித்தது.
தமிழ்நாடு அரசின் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த இந்த தீர்ப்பு இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆளுநர்கள் அரசியல்வாதிகளாக செயல்படுவது சட்டவிரோதம்; அரசியல் சாசனத்துக்கு எதிரனாது என்கிற உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை மாநில கட்சிகள் பெரும்பாலும் வரவேற்றுள்ளன.
அதேநேரத்தில் கேரளா மாநில ஆளுநரான ராஜேந்திர அர்லேகர், உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் ஆளுநர்களுக்கு அரசியல் சாசனம் கெடு விதிக்காத போது உச்சநீதிமன்றம் எப்படி விதிக்க முடியும்? உச்சநீதிமன்றமே அரசியல் சாசனத்தை திருத்துகிறதா? அப்படியானால் நாட்டில் நாடாளுமன்றம் எதற்காக இருக்கிறது என கொந்தளித்திருந்தார்.
இந்த நிலையில் கேரளாவில் ஆளும் இடதுசாரி அரசு அதிரடியாக ஒரு முடிவெடுத்துள்ளது. கேரளா மாநிலத்தில், ஆளுநரால் நிலுவையில் வைக்கப்பட்டுள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் தரக் கோரி உச்சநீதிமன்றத்தை நாடுவதற்கு அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு அரசு பாணியில் கேரளாவும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications