எந்த பஞ்சாயத்தும் இல்லை.. சதாசிவத்தை முழுமையாக வரவேற்கிறோம்: கேரளா அரசு பல்டி!!
திருவனந்தபுரம்: கேரளா ஆளுநராக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் நியமிக்கப்பட்டுள்ளதை முழுமையாக வரவேற்பதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கேரளா மாநில ஆளுநராக பதவி வகித்து வந்த ஷீலா தீட்சித், கடந்த மாதம் 26ந் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், தமிழகத்தை சேர்ந்தவருமான பி.சதாசிவம் கேரளா ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
முன்னதாக பி.சதாசிவம் நியமனத்துக்கு காங்கிரஸ் மேலிடம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதேபோல் கேரளா காங்கிரஸ் கட்சியும் கடுமையாக எதிர்த்தது.

அத்துடன் ஆளுநர் நியமனம் தொடர்பாக மாநில அரசை கலந்து ஆலோசிக்கவில்லை என கேரள முதல்வர் உம்மன்சாண்டி புகார் தெரிவித்திருந்தார். அதே நேரத்தில் மத்திய அரசு கருத்து கேட்டால் எங்களது நிலையைத் தெரிவிப்போம் என்றும் உம்மன் சாண்டி கூறியிருந்தார்.
இதனால் சதாசிவம் நியமனத்தை கேரளா மாநில அரசு எதிர்க்கலாம் என்று கூறப்பட்டது. தற்போது தனது நிலையை மாற்றி, கேரளா ஆளுநராக பி.சதாசிவம் நியமிக்கப்பட்டதை அம்மாநில அரசு வரவேற்றுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்து பேசிய கேரளா மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா. ஆளுநராக சதாசிவத்தை முழுமனதுடன் வரவேற்கிறோம். தற்போது இவ்விவகாரத்தில் வேறுபாடுகள் மற்றும் சர்ச்சைகளுக்கு இடமில்லை. இவ்விவகாரம் தொடர்பான அனைத்து சர்ச்சைகளும் முடிவுக்கு வந்துவிட்டது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications