சோலார் பேனல் மோசடி வழக்கு: உம்மன்சாண்டி மீது எப்ஐஆர் பதிவு செய்ய ஹைகோர்ட் இடைக்கால தடை!!
திருவனந்தபுரம்: சோலார் பேனல் மோசடி வழக்கில் கேரளா முதல்வர் உம்மன்சாண்டி மீது முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்ய கேரளா உயர்நீதிமன்றம் 2 மாத காலம் இடைக்கால விதித்துள்ளது.
சூரிய ஒளி மின்சார உற்பத்திக்கான சோலார் பேனல்களை அமைத்து தருவதாக கூறி பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடி செய்தனர் கேரளா பெண் தொழிலதிபர் சரிதா நாயர், அவரது கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன் என்பது குற்றச்சாட்டு. இதில் சரிதாநாயர், பிஜு ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளி வந்துள்ளனர்.
இந்த மோசடி குறித்து நீதிபதி சிவராஜன் தலைமையிலான கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது. இதில் சரிதா நாயர் பல திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.

முதல்வர் உம்மன்சாண்டிக்கு ரூ.1.90 கோடி லஞ்சம் கொடுத்ததாக சரிதா நாயர் வாக்குமூலம் கொடுத்திருந்தார். இதன் அடிப்படையில் திருச்சூர் லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் உம்மன்சாண்டிக்கு எதிராக பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த நீதிமன்றம் உம்மன்சாண்டி மீது எப்ஐஆர் போட உத்தரவிட்டது. இதனை எதிர்த்து கேரளா உயர்நீதிமன்றத்தில் உம்மன்சாண்டி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இம்மனுவை விசாரித்த கேரளா உயர்நீதிமன்றம், உம்மன்சாண்டி மீது எப்ஐஆர் போடுவதற்கு 2 மாத கால இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இதனால் உம்மன்சாண்டிக்கு தற்காலிக நிம்மதி ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications