ராகிங் கொடுமை.. கிட்னி பாதிக்கப்பட்ட மாணவர் மருத்துவமனையில் அனுமதி.. 9 மாணவர்கள் தலைமறைவு
ராகிங்கால் பாதிக்கப்பட்ட மாணவர் ஒருவர் சிறுநீரக கோளாறால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருச்சூர்: கேரள மாநிலம் திருச்சூரில் ராகிங் கொடுமையால் கல்லூரி மாணவர் ஒருவர் கிட்னி பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் கோட்டயம் அரசு பாலிடெக்னிக் கல்லூரில் முதலாம் ஆண்டு படித்து வந்தவர் மாணவர் ஓ.எஸ். அவினாஷ் (22). இவர் அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வருகிறார். இந்த நிலையில் அதே கல்லூரில் 3-ம் ஆண்டு படிக்கும் சீனியர் மாணவர்கள் 9 பேர் ஒரு குழுவாக அவினாஷை கடந்த 2ம் தேதி ராகிங் செய்துள்ளனர். 6 மணி நேரத்திற்கும் மேலாக மாணவர் அவினாஷ் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவர் ஓஎஸ் அவினாஸ் கூறுகையில், சீனியர் மாணவர்கள் எங்களது ஆடையை களைய கூறினர். தொடர்ந்து கடுமையான பயிற்சி செய்ய வைத்தனர். தரையில் நீச்சல் அடிக்க கூறி வற்புறுத்தினர். இது சுமார் 6 மணி நேரம் நீடித்தது. இதனால் நாங்கள் சோர்ந்து போய் கீழே விழுந்துவிட்டோம். இருப்பினும், அந்த அறையை பூட்டி வைத்திருந்த மாணவர்கள், எங்களை சத்தத்துடன் பாடுமாறு வலியுறுத்தினர். மது குடிக்க கட்டாயப்படுத்தியதாக அவர் கூறினார்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட அவினாஸ் திருச்சூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கடுமையான பயிற்சி காரணமாக, உடலில் உருவான ரசாயனம் காரணமாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளது. நான்கு முறை டயாலிசிஸ் செய்யப்பட்டுள்ளது என்றார். பாதிக்கப்பட்ட மற்றொரு மாணவர் எர்ணாகுளம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து 9 மாணவர்கள் மீது கொலை முயற்சி, ராகிங் மற்றும் எஸ்சி எஸ்டி சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications