பஞ்சாபில் 'பதான்கோட்' பாணியில் தாக்குதல் நடத்த காலிஸ்தான் திட்டம்... உளவுத் துறை பகீர் தகவல்
சண்டிகர்: இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனிநாடு கோரும் காலிஸ்தான் தீவிரவாத இயக்கம் பஞ்சாபில் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாகிஸ்தானில் இருந்து புகுந்த தீவிரவாதிகள் பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் கடந்த ஜனவரி மாதம் தாக்குதல் நடத்தினர். இவர்களை எதிர்த்து போராடிய இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் 6 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றனர். பாதுகாப்பு படை வீரர்கள் 7 பேர் வீர மரணம் அடைந்தனர்.
இந்த நிலையில் இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனிநாடு கோரும் காலிஸ்தான் இயக்கம் பஞ்சாப் மாநிலத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
காலிஸ்தான் இயக்கத்தின் தலைவராக இருந்த ஜக்தர் தாராவை தாய்லாந்து நாட்டில் வைத்து இன்டர்போல் கைது செய்தது. இதையடுத்து, கடந்த 1995.ம் ஆண்டு முதல் கனடாவில் வசித்து வரும் ஹர்தீப் நிஜ்ஜர் என்பவர்தான் காலிஸ்தான் தீவிரவாத இயக்கத்தின் தலைவராக செயல்பட்டு வருகிறார்.
கனடாவில் இருந்தபடியே இந்தியாவில் தனிநாடு போராட்டத்தை முன்னெடுக்க அங்குள்ள சீக்கிய இளைஞர்களை ஒன்று திரட்டிய அவர், அவர்களுக்கு தீவிரவாத பயிற்சியும் அளித்து வந்திருக்கிறார். பாகிஸ்தானுக்கு அடிக்கடி சென்றுள்ள அவர், ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் சேர்ந்து ஆயுத பயிற்சியும் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
பஞ்சாபில் கடந்த 2007-ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஹர்தீப் நிஜ்ஜாருக்கு தொடர்பு இருப்பதாக பஞ்சாப் அரசு சந்தேகிக்கிறது. எனவே பஞ்சாப் அரசு அவரை தேடும் குற்றவாளிகளின் பட்டியலில் வைத்துள்ளது.
இந்த நிலையில்தான் பஞ்சாப்பில் 'பதான்கோட்' பாணியிலான தாக்குதல் நடத்தவும் நிஜ்ஜார் தலைமையிலான காலிஸ்தான் இயக்கம் கனடாவில் இருந்தபடியே சதித் திட்டங்களை தீட்டுவதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இத்தகவலை கனடாவுக்கு இந்திய அரசு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளது.