கிரண்பேடி 2, 277 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி!! 22 ஆண்டுகாலம் பாஜக வசம் இருந்த தொகுதி பறிபோனது!!
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதாவின் முதல்வர் வேட்பாளரான கிரண்பேடி 2, 277 வாக்குகள் வித்தியாசத்தில் படு தோல்வியைத் தழுவினார். கிரண்பேடி போட்டியிட்ட கிருஷ்ணா நகர் தொகுதி 1993ஆம் ஆண்டு முதல் 22 ஆண்டுகாலம் பாஜக வசம் வைத்திருந்தது.. இப்போது ஆம் ஆத்மியிடம் பறிகொடுத்துவிட்டது.
டெல்லி சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென பாரதிய ஜனதாவில் இணைந்தார் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான கிரண்பேடி. இதற்கு முன்னர் அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் அரவிந்த் கேஜ்ரிவாலுடன் இணைந்து செயல்பட்டவர் கிரண்பேடி.

பாரதிய ஜனதாவில் இணைந்த கிரண்பேடி கட்சியில் சேர்ந்த சில நாட்களிலேயே முதல்வர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார். ஆனால் இதற்கு பாரதிய ஜனதா கட்சியில் கடும் எதிர்ப்பு நிலவியது.
பாரதிய ஜனதாவின் தாய் இயக்கமான ஆர்.எஸ்.எஸ்.ம் கூட அதிருப்தியை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் இன்று டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.
பா.ஜ.க.வின் முதல்வர் வேட்பாளரான கிரண்பேடி தாம் போட்டியிட்ட கிருஷ்ணா நகர் தொகுதியில் தொடக்கத்தில் முன்னிலையில் இருந்து வந்தார். பின்னர் ஆம் ஆத்மி வேட்பாளர் பக்கா அட்வகேட்டைவிட பின் தங்கியிருந்தார்.
ஒருகட்டத்தில் 866 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வந்தார். இறுதியில் 2, 277 வாக்குகள் வித்தியாசத்தில் ஆம் ஆத்மி வேட்பாளர் பக்காவிடம் தோல்வியை சந்தித்தார்.
கடந்த 2013 தேர்தலில் 43,150 வாக்குகளைப் பெற்று வென்ற கிருஷ்ணா நகர் தொகுதியில் இம்முறை கிரண்பேடி பெரும் போராட்டமே நடத்த வேண்டியிருந்தது பாரதிய ஜனதா கட்சியை கடும் அதிர்ச்சியடைய வைத்திருந்தது.
அதுவும் இந்த கிருஷ்ணா நகர் தொகுதி பாரதிய ஜனதாவின் மூத்த தலைவரும் தற்போது மத்திய அமைச்சருமான டாக்டர் ஹர்ஷவர்த்தன் 1993ஆம் ஆண்டு முதல் வெற்றி பெற்று வந்த தொகுதி. 22 ஆண்டுகாலமாக பாரதிய ஜனதா வசம் இருந்த தொகுதியில் கிரண்பேடி தோல்வியைத் தழுவினார்.
கிருஷ்ணா நகர் தொகுதி வாக்குகள் விவரம்:
எஸ்.கே. பக்கா அட்வகேட் (ஆம் ஆத்மி) 65, 919
கிரண்பேடி (பாரதிய ஜனதா) 63, 642
பன்சிலால் (காங்கிரஸ்) 6,189












Click it and Unblock the Notifications