'அத்தாச்சி' கூட்டிய பஞ்சாயத்து.... சிக்கலில் பாஜக பெண் வேட்பாளர்!
சண்டிகர் சண்டிகர் தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நடிகர் அனுபம் கெர்ரின் மனைவி கிரண் கெர்ருக்கு அவரது அண்ணன் மனைவியால் ஒரு சிக்கல் வந்துள்ளது.
கிரண் கெர் பாஜக சார்பில் சண்டிகரில் போட்டியிடுகிறார். இந்த நிலையில் இவரது அண்ணி தேர்தல் ஆணையத்தில் ஒரு புகாரைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், கிரண் கெர் தாக்கல் செய்த வேட்பு மனுவில் சண்டிகர் செக்டர் 8ஏ பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வருவதாக கூறியிருக்கிறார். சண்டிகர் செக்டர் 17இ பகுதியில் உள்ள பூர்வீக வீட்டுக்கு 25 சதவீதம் சொத்துரிமையில் பங்கு இருப்பதாகவும் கூறியிருக்கிறார். இது முற்றிலும் தவறானது.
இந்து கூட்டுக்குடும்பம் சொத்துரிமை சட்டப்படி, இதுநாள் வரையிலும் சொத்து பங்கு பிரிக்கப்படவில்லை. அந்த சொத்து தொடர்பாக நான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. அப்படியிருக்கையில், சொத்தில் 25 சதவீதம் பங்கு இருப்பதாக கிரண் கூறியிருக்கிறார்.
மேலும், அவரது ஓட்டு அந்தேரி மேற்கு சட்டமன்ற தொகுதியில் தான் உள்ளது. அதில், மும்பை ஜூஹூ டாக்டர் ஏபி நாயர் ரோட்டில் உள்ள வீட்டில் கிரண் வசிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கோர்ட் சம்மன்களும் அந்த முகவரிக்குதான் கடந்த 2011ம் ஆண்டில் இருந்து அனுப்பப்பட்டு வருகிறது.
எனவே, தவறான தகவல்களை அளித்துள்ள கிரண் கெர்ரின் வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து விசாரித்து வருவதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மதினி ரூபத்தில் இப்படி ஒரு சிக்கலா என்று கிரண் கெர் டென்ஷனாக இருக்கிறாராம்.