"எல்லாமே பொய்.." அன்று கொல்கத்தா மருத்துவரின் பெற்றோருக்கு வந்த 3 போன் கால்.. அதிர வைக்கும் தகவல்
கொல்கத்தா: அன்றைய தினம் காலை கொல்கத்தா பயிற்சி மருத்துவரின் குடும்பத்தினருக்கு அது வழக்கமான காலையாகவே தொடங்கியது. ஆனால், அப்போது 30 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து அந்த 3 போன் கால்கள் அவர்கள் வாழ்க்கையை மொத்தமாகப் புரட்டிப் போட்டுவிட்டது. இதற்கிடையே இப்போது அந்த போன் கால் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அது குறித்து நாம் பார்க்கலாம்.
கடந்த ஆக. 9ம் தேதி கொல்கத்தா பயிற்சி மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தின. இந்தச் சம்பவத்தைக் கொல்கத்தா போலீசாரும் மருத்துவமனை நிர்வாகமும் கையாண்ட விதம் கடுமையான விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.

மூன்று போன் கால்: இதற்கிடையே சம்பவம் நடந்த அன்று பயிற்சி மருத்துவரின் பெற்றோருக்கு 30 நிமிடங்களுக்குள் அடுத்தடுத்து வந்த மூன்று போன் கால், அவர்களின் வாழ்க்கையை மொத்தமாக உடைத்துப் போட்டுவிட்டது. இதற்கிடையே இப்போது அந்த மூன்று போன் கால் குறித்த ஆடியோ விவரங்களை இப்போது பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ளது. டாக்டரின் பெற்றோரை தொடர்பு கொண்ட போது மருத்துவமனை தரப்பில் இருந்து இரண்டு பேர் பெங்காலி மொழியில் பேசியுள்ளனர்.
இருப்பினும், அந்த பயிற்சி மருத்துவருக்கு என்ன நடந்தது என்பதை அவர்கள் முதல் 2 போன் காலில் விளக்கவில்லை. இதனால் மருத்துவமனைக்குச் சென்று சேரும் வரை அந்த பெற்றோர் குழப்பத்திலும் அதிர்ச்சியிலும் தான் இருந்துள்ளனர்.
ஆக. 9ம் தேதி காலை 10.53 மணிக்கு முதல் அழைப்பு வந்ததாகக் கொலை செய்யப்பட்ட மருத்துவரின் பெற்றோர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். மருத்துவமனையின் உதவி கண்காணிப்பாளராக இருந்த பெண், பயிற்சி மருத்துவரின் பெற்றோரைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
போன் கால் 1
மருத்துவரின் தந்தை: என்ன நடந்தது, ப்ளீஸ் என்னிடம் சொல்லுங்க
மருத்துவமனை தரப்பு: அவள் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது.. சீக்கிரம் வாங்க
மருத்துவரின் தந்தை: ப்ளீஸ் என்ன நடந்ததுனு சொல்லுங்க
மருத்துவமனை தரப்பு: என்ன நடந்தது என்பதை டாக்டர் சொல்வாரு.. நீங்கள் சீக்கிரம் வாங்க.
மருத்துவரின் தந்தை: அப்போ நீங்க யாரு?
மருத்துவமனை தரப்பு: நான் உதவியாளர்.. டாக்டர் இல்லை.
மருத்துவரின் தந்தை: அங்கு டாக்டர்கள் யாரும் இல்லையா?
மருத்துவமனை தரப்பு: நான் உதவியாளர். உங்கள் மகளை எமர்ஜென்சி வார்டுக்கு கொண்டு வந்துள்ளார்கள்.. நீங்க வந்ததும் கால் பண்ணுங்க.

மருத்துவரின் தாய்: அவளுக்கு என்ன ஆனது சொல்லுங்க ப்ளீஸ்.. அவள் ட்யூட்டியில் தான் இருந்தாள்.
மருத்துவமனை தரப்பு: நீங்க சீக்கிரம் வாங்க
இதுதான் அவர்களுக்கு இடையே நடந்த முதல் போன் கால். இந்த போன் கால் வந்து கொஞ்ச நேரத்தில் பெற்றோர் மருத்துவமனைக்குக் கிளம்பிவிட்டனர். அவர்கள் அங்கே போகும் வழியிலேயே இரண்டாவது போன் கால் வந்துள்ளது. அதில் ஆண் ஒருவர் அவர்களிடம் பேசியிருக்கிறார்.
2வது போன் கால்
மருத்துவமனை தரப்பு: நான் ஆர்ஜி கார் மருத்துவமனையில் இருந்து பேசுகிறேன்.
மருத்துவரின் தாய்: என்ன தான் ஆச்சு.. சொல்லுங்க ப்ளீஸ்.
மருத்துவமனை தரப்பு: நீங்க கிளம்பிட்டீங்க தானே?
மருத்துவரின் தாய்: ஆம், நாங்க கிளம்பிட்டோம். எனது மகள் இப்போ எப்படி இருக்கா?
மருத்துவமனை தரப்பு: நீங்க முதல்ல நேரில் வாருங்க.. நாங்க சொல்கிறோம். ஆர்ஜி கர் மருத்துவமனையின் செஸ்ட் பிரிவு ஹெச்ஓடி ரூமுக்கு வாங்க.
மருத்துவரின் தாய்: ஓகே.

இதுதான் இருவருக்கும் இடையே நடந்த இரண்டாவது போன் காலாகும். இந்த போன் கால் வந்து கொஞ்ச நேரத்தில் மூன்றாவது முறையாக மீண்டும் ஒரு கால் போய் இருக்கிறது. அதில் தான் மருத்துவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறியுள்ளனர்.. உதவி கண்காணிப்பாளரிடம் கால் செய்து பயிற்சி மருத்துவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறியுள்ளனர். இதுவே இப்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. நீதிமன்றம் கூட இது தொடர்பாகவே கேள்வி எழுப்பியுள்ளது.
3வது போன் கால்
மருத்துவரின் தந்தை: வணக்கம்
மருத்துவமனை தரப்பு: நான் உதவியாளர் பேசுகிறேன்.
மருத்துவரின் தந்தை: ஹான்.. சொல்லுங்க.
மருத்துவமனை தரப்பு: உங்கள் மகள் தற்கொலை செய்து கொண்டதாகச் சந்தேகிக்கிறோம்.. அவள் உயிரிழந்துவிட்டார். போலீசார் இங்கு வந்துள்ளனர். உடனே எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வாங்க.
மருத்துவரின் தந்தை: நாங்க உடனே வரோம்.
மருத்துவரின் தாய் (பின்னணியில் குரல் கேட்கிறது): ஐயோ.. எனது மகள் இப்போ இல்லையா என அழுவது கேட்கிறது.












Click it and Unblock the Notifications