பெண் மருத்துவர் கொலை விவகாரம்.. மத்திய ராணுவப் படையின் கட்டுக்குள் வந்த கொல்கத்தா மருத்துவமனை
கொல்கத்தா: கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கொல்கத்தா மருத்துவமனைக்கு மத்திய துணை ராணுவப் படையான சிஐஎஸ்எப் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.
மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இரண்டாமாண்டு முதுநிலை மருத்துவம் பயின்று வந்த பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவரைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாகக் கூறப்படும் சஞ்சய் ராய் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கொலை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து நாட்டின் பல பகுதிகளிலும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
உயிரிழந்த பெண் மருத்துவரின் தலை, முகம், கழுத்து, கைகள், பெண்ணுறுப்பு என 14 இடங்களில் கொடூர காயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதிபயங்கர தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கழுத்து நெறிக்கப்பட்டதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பெண் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சம்பவத்தை கண்டிப்பதாகக் கூறி வன்முறையாளர்கள் மருத்துவமனையை சூறையாடினர்.
அப்போது தடயங்கள் அழிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில், கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
மருத்துவமனையில் நடைபெற்ற வன்முறை குறித்து மாநில அரசு மற்றும் போலீஸாரிடம் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்கப்பட்டன. கொலை சம்பவம் நடந்தவுடன் அந்த வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பை மாநில அரசு பலப்படுத்தியிருக்க வேண்டும். அதை செய்ய மாநில அரசு தவறிவிட்டது என கேள்வி எழுப்பியிருந்தனர்.












Click it and Unblock the Notifications