கலவர பூமியான கொல்கத்தா மைதானம்.. மெஸ்ஸி மற்றும் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி
கொல்கத்தா: கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் நடந்த கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிக்கு மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மன்னிப்பு கோரியுள்ளார். மெஸ்ஸி மற்றும் அவரது ரசிகர்களிடம் மனதார மம்தா பானர்ஜி மன்னிப்பு கோரிய நிலையில் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
அர்ஜென்டினா அணியின் கால்பந்து ஜாம்பவன் லியோனல் மெஸ்ஸி 3 நாள் சுற்றுப்பயணமாக நள்ளிரவில் இந்தியா வந்தார். கொல்கத்தாவில் வந்திறங்கிய மெஸ்ஸிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பிறகு ஸ்ரீபூமி ஸ்போர்ட்டிங் கிளப்பில் உள்ள அவரது உருவ சிலையை மெஸ்ஸி திறந்து வைத்தார்.

அதன்பிறகு கொல்கத்தாவின் சால்ட் லேக் மைதானத்துக்கு மெஸ்ஸி சென்றார். அங்கு அவரை பாரக்க ஏராளமான ரசிகர்கள் குவிந்திருந்தனர். மெஸ்ஸியை பார்க்க நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி ரசிகர்கள் மைதானத்தில் குவிந்திருந்தனர்.
ஆனால், மைதானத்துக்கு வந்த மெஸ்ஸியை சுற்றி முக்கிய பிரபலங்கள், பாதுகாவலர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நின்று கொண்டனர். இதனால் ரசிகர்களால் மெஸ்ஸியை பார்க்க முடியவில்லை. இதனால் ரசிகர்கள் கடும் கோபமடைந்தனர்.
சிலர் மைதானத்தில் தண்ணீர் பாட்டீல்களை தூக்கி வீசினர். நிலைமை மோசமாவதை உணர்ந்த பாதுகாவலர்கள் மெஸ்ஸியை மைதானத்தில் இருந்து உடனடியாக அழைத்த சென்றனர். இதனால் இன்னும் ஆக்ரோஷமான ரசிகர்கள் மைதானத்துக்குள் நுழைந்தனர். அங்கு போடப்பட்டு இருந்த இருக்கையை அடித்து நொறுக்கினர்.
பிரபலங்களுக்கு அமைக்கப்பட்டு இருந்த கூடாரத்தை தீவைத்து எரித்தனர். நிலைமை எல்லை மீறவே போலீசார் தடியடி நடத்தி அங்கிருந்தவர்கள் கலைத்தனர். இதனால் விழாக்கோலம் பூண்டிருந்த மைதானம் கலவர பூமியாக மாறியது. பெரும் பதற்றத்தை உருவாக்கியது.
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக மம்தா பானர்ஜி உள்ளார். கொல்கத்தா தான் மேற்கு வங்கத்தின் தலைநகராகும். நிலைமை கட்டுக்கடங்காமல் போவதை நினைத்து கவலைப்பட்ட மம்தா பானர்ஜி உடனடியாக மெஸ்ஸி, அவரது ரசிகர்களிடம் மன்னிப்பு கோரினார்.
இதுபற்றி மம்தா பானர்ஜி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ‛‛இன்று சால்ட் லேக் மைதானத்தில் காணப்பட்ட நிர்வாகக் கோளாறு குறித்து நான் மிகவும் வருத்தமும் அதிர்ச்சியும் அடைந்தேன். இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்காக லியோனல் மெஸ்ஸி மற்றும் அனைத்து விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் அவரது ரசிகர்களிடம் நான் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
ஓய்வு பெற்ற கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி ஆஷிம் குமார் ரே தலைமையில், மாநில தலைமைச் செயலாளர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளரை (உள்துறை) உறுப்பினர்களாக கொண்ட உயர்மட்ட விசாரணை குழுவை அமைத்துள்ளேன். விரிவான விசாரணை நடத்துவது, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க சரியான நடவடிக்கைகளை பரிந்துரைத்தல் போன்ற பணிகளை இந்தக் குழு மேற்கொள்ளும்'' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications