ரயில் பயணிகள் இனிமேல் ஏமாற தேவையில்லை... ஆர்டர் செய்யும் சாப்பாட்டுக்கு பில் அளிக்க முடிவு
மங்களூர்: ரயில் பயணத்தின்போது வாங்கும் சாப்பாடு, தின்பண்டங்களுக்கு பில் அளிக்கும் நடைமுறையை கொங்கன் ரயில்வே ஆரம்பித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி இயக்கப்படும் ரயில்வே நெட்வொர்க் கொங்கன் ரயில்வே என்று அழைக்கப்படும். இந்த ரயில்வேயில்தான் சாப்பாட்டுக்கு பில் அளிக்கும் நடைமுறை அறிமுகமாகியுள்ளது.

எல்லாமே கிடைக்குமுங்கோ..
இப்ப பார்த்துகிட்டீங்கன்னா..., கடல்ல கப்பல் போகுது, ரோட்டுல பஸ் போகுது, வானத்தில ஏரோப்பிளைன்போகுது, அந்த மாதிரி பயணத்தின்போது கூட வாங்க முடியாத பல அரிய பொருட்களை ரயில் பயணத்தின்போது நாம வாங்கிக்கொள்ளலாம். ஆனால் எதற்கும் பில்தான் கிடையாது. குறிப்பாக ரயில்வே கேட்டரிங் ஊழியர்கள் கூறும் விலையை கொடுத்துவிட்டு சாப்பிட்டுவிட்டு செல்வதுதான் பயணிகள் வழக்கம்.

விலை என்ன சொல்லுங்க பார்ப்போம்..
இந்த சாப்பாட்டுக்கு உண்மையான விலையைத்தான் வசூலிக்கிறார்களா, அல்லது கூடுதலாக வசூலிக்கிறார்களா என்பது குறித்து யாருக்கும் தெரியாது. அதை விசாரிப்பதும் இல்லை. எனவே, வாங்கும் சாப்பாடுக்கு எலக்ட்ரானிக் முறையில் பில் அளிக்கும் நடைமுறையை கொங்கன் ரயில்வே கொண்டுவந்துள்ளது.

பில் வசதி வந்தாச்சு
கொங்கன்கன்யா எக்ஸ்பிரஸ், மண்டோவி எக்ஸ்பிரஸ் ஆகியவற்றின் ஏசி பெட்டிகளில் பில் கொடுக்கும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. படிப்படியாக பிற ரயில்களுக்கும், படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுக்கும் இந்த நடைமுறை விரிவாக்கம் செய்யப்படும் என்று கொங்கன் ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழியரின் ஜாதகமே நம் கையில்...
கையடக்க பில்லிங் மிஷினில் பொத்தானை அழுத்தி சாப்பாட்டு வகைகளை பதிவு செய்தால் உடனடியாக பில் கிழித்து கையில் கொடுக்கப்படும். சாப்பாடு வழங்கிய ஊழியரின் பெயர், தேதி மற்றும் உணவு வாங்கிய நேரம் ஆகியவையும் அந்த பில்லில் குறிப்பிடப்பட்டிருக்கும்.












Click it and Unblock the Notifications