'தமிழக போலீஸ் பாதுகாப்புடன்' ஓய்வெடுத்த கர்நாடகா பேருந்துகள்! வெறிச்சோடிய கோயம்பேடு!!
சென்னை: காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்டுவதை கண்டித்து தமிழக விவசாயிகள் முழு அடைப்புப் போராட்டம் நடத்தியதால் முன்னெச்சரிக்கையாக சென்னை கோயம்பேட்டில் கர்நாடகா அரசு பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டன. அத்துடன் பொதுவாக பேருந்துகள் மிகக் குறைவாக இயக்கப்பட்டதால் கோயம்பேடு பேருந்து நிலையமும் பகல் முழுவதும் வெறிச்சோடியே காணப்பட்டது. இன்று மாலை 6 மணிக்குப் பின்னரே இயல்பு நிலை திரும்பி பேருந்துகள் வழக்கம் போல இயங்கத் தொடங்கின.

காவிரியின் குறுக்கே மேகதாது, ராசிமணல் ஆகிய இடங்களில் கர்நாடகா அணைகள் கட்டுவதற்கு தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு எதிராக தமிழகத்தில் விவசாயிகள் அழைப்பின்படி 12 மணி நேர முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

இன்று காலைதான் போராட்டம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று இரவே சென்னை கோயம்பேட்டில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் கர்நாடகா அரசு பேருந்துகளை மறித்து மறியல் போராட்டம் நடத்தி கைதாகினர். இதனால் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கர்நாடகாவுக்கு அம்மாநில அரசுப் பேருந்துகளை இயக்குவதில்லை என்று முடிவு செய்யப்பட்டது.

மேலும் கர்நாடக மாநிலம் பெங்களுருவில் இருந்து சென்னை கோயம்பேட்டுக்கு வந்த பேருந்துகளும் இங்கேயே நிறுத்தப்பட்டன. அனைத்து பேருந்துகளுக்கும் தமிழக போலீசார் பாதுகாப்பாகவும் நிறுத்தப்பட்டிருந்தனர்.
அதே நேரத்தில் தமிழக அரசின் ஒரு சில விரைவுப் போக்குவரத்துக்கு கழக பேருந்துகள் மட்டும் கர்நாடகா எல்லையான ஓசூர் வரை இயக்கப்பட்டன.

மேலும் தமிழக அரசும் பொதுவாக பேருந்துகளை மிக அதிக அளவில் இயக்கவில்லை. இதனால் எப்போதும் மக்கள் நெரிசலில் திணறும் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தின் டிக்கெட் கவுண்ட்டர் உட்பட அனைத்து பகுதிகளுமே வெறிச்சோடியே காணப்பட்டது.












Click it and Unblock the Notifications