சூப்பர் ஸ்ப்ரெட்டரான கும்பமேளா? ஒரே இடத்தில் குவிந்த 70 லட்சம் பக்தர்கள்.. 2600பேருக்கு கொரோனா உறுதி
டேராடூன்: ஹரித்துவாரில் நேற்று நிறைவடைந்த கும்பமேளாவில் சுமார் 70 லட்சம் பேர் பங்கேற்றதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், கும்பமேளா கொரோனா சூப்பர் ஸ்ப்ரெட்டர் நிகழ்வாக மாறும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கடந்த ஒரு மாதமாக மகா கும்பமேளா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்படும்,
கொரோனா 2ஆம் அலை காரணமாக இந்த ஆண்டு கும்பமேளா நடைபெறுமா என்பதில் சந்தேகம் நிலவியது. இருப்பினும், உத்தரகண்ட் அரசு கும்பமேளாவை நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது.

கும்பமேளா
கும்பமேளா நிகழ்வு வழக்கமாக மூன்று மாதங்கள் வரை நடைபெறும்.. கொரோனா பரவல் காரணமாக இந்த முறை வரலாற்றிலேயே முதல்முறையாக கும்பமேளாவை ஒரு மாதம் மட்டும் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதில் கலந்து கொள்ளும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகடிவ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், பக்தர்கள் முறையாக மாஸ்க்குகளை அணிந்து, தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

70 லட்சம் பேர்
இதில் கலந்துகொண்ட பெரும்பாலான பக்தர்கள் மாஸ்க்குகளை அணிந்திருந்தனர். இருப்பினும், கங்கையில் புனித நீராட அனைத்து பக்தர்களும் அவசரம் காட்டியதால், அங்கு தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. கொரோனா பரவின் 2ஆம் அலைக்கு மத்தியில் நடைபெற்ற கும்பமேளாவில் சுமார் 70 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2,600 பேருக்கு கொரோனா பாசிடிவ்
மேலும், கும்பமேளாவில் கலந்த கொண்ட பக்தர்களில் இரண்டு லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் சுமார் 2,600 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதாக கும்பமேளா சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார். கொரோனா 2ஆம் அலைக்கு மத்தியில் நடத்தப்பட்ட கும்பமேளாவில் 70 லட்சம் பேர் பங்கேற்றுள்ளதால், அங்கு இது கொரோனா சூப்பர் ஸ்ப்ரெட்டர் நிகழ்வாக மாறும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

பிரதமர் வேண்டுகோள்
முன்னதாக, நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதும், கும்பமேளாவில் குறைவான பக்தர்கள் கலந்து கொள்ள வேண்டும் எனப் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். அதன் பின்னரே கும்பமேளாவில் கலந்துகொள்ளும் பக்தர்கள் மற்றும் சன்னியாசிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. அதிலும் கடைசியாக ஏப்ரல் 27இல் நடைபெற்ற புனித நீராடல் நிகழ்வில் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே பக்தர்கள் கலந்து கொண்டனர்,

மாநில அரசுகள் அதிருப்தி
கொரோனா 2ஆம் அலை உச்சத்தில் இருக்கும்போது, கும்பமேளா தொடர்ந்து நடத்தப்படுவதைப் பலரும் விமர்சித்தனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் கும்பமேளாவில் கலந்துகொள்ளச் சென்றிருந்தனர். இதனால் டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களும் கும்பமேளாவில் கலந்து கொண்டவர்கள் கட்டாயம் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என அறிவித்திருந்தது.












Click it and Unblock the Notifications