லலித் மோடி விவகாரத்தில் சுஷ்மா, வசுந்தரா பதவி விலகத் தேவையில்லை: பாஜக உறுதி
டெல்லி: ஊழல் - முறைகேடு புகார்களில் சிக்கிய ஐபிஎல் முன்னாள் ஆணையர் லலித் மோடிக்கு பிரிட்டன் விசா கிடைக்க பெரும் உதவி செய்த மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோர் பதவி விலகத் தேவையில்லை என்று பாஜக திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
அவர்கள் இருவரும் பதவி விலகவில்லையென்றால், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரை செயல்பட விடமாட்டோம் என்று காங்கிரஸ் கட்சி எச்சரித்துள்ள நிலையில், பாஜக தன் நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளது.

ஊழல், மோசடி, முறைகேடு என பல்வேறு பிரிவுகளில் லலித் மோடி மீது இந்தியாவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக பிரிட்டனில் லலித் மோடி தலைமறைவாக உள்ளார்.
இந்நிலையில், போர்ச்சுகல் நாட்டில் மருத்துவ சிகிச்சை பெறும் மனைவியைக் காண்பதற்கு லலித் மோடிக்கு பிரிட்டன் அரசு விசா வழங்கியது. இதற்கு, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உதவியுள்ளார். அவருக்கும் முன்பே, லலித் மோடி பிரிட்டனில் குடியேற ஆதரவு தெரிவித்து வசுந்தரா ராஜே கடிதம் அனுப்பியுள்ளார். இந்த உண்மைகள் அம்பலமாகியுள்ளதால், சம்பந்தப்பட்ட தலைவர்கள் மற்றும் பாஜகவுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
சுஷ்மா ஸ்வராஜும், வசுந்தரா ராஜேவும் பதவி விலக வேண்டும் என்றும், இந்த விவகாரம் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி.) விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
குறிப்பாக, சுஷ்மா ஸ்வராஜும், வசுந்தரா ராஜேவும் பதவி விலகவில்லை என்றால், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை செயல்பட விடமாட்டோம் என்று, மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி மிரட்டல் விடுத்துள்ளது.
பிரதமர் மோடி ஆலோசனை
இந்த நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை பாஜக தலைவர் அமித் ஷாவும், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் வியாழக்கிழமை தனித் தனியே சந்தித்துப் பேசினார்கள்.
இதன் பிறகு பாஜக வெளியிட்ட அறிவிப்பில், லலித் மோடிக்கு உதவியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள விவகாரத்தில், சுஷ்மா ஸ்வராஜும், வசுந்தரா ராஜேவும் பதவி விலக வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரிப்பதாகத் தெரிவித்தது.
இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுதான்சு திரிவேதி கூறுகையில், 'சுஷ்மா ஸ்வராஜும், வசுந்தரா ராஜேவும் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எந்த அடிப்படையும் இல்லை,' என்றார்.












Click it and Unblock the Notifications