மாட்டுத்தீவன ஊழல் வழக்கு: வக்கீல் உயிரிழந்ததால் லாலு பிரசாத் தண்டனை விவரம் நாளைக்கு ஒத்திவைப்பு!
மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்துக்கு நாளை தண்டனை விவரம் அளிக்கப்பட்டுள்ளது.
ராஞ்சி: மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்துக்கு தண்டனை விவரம் நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலுபிரசாத் யாதவ் கால்நடை தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். லாலுபிரசாத் யாதவ் குற்றவாளி என்று ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி தீர்ப்பளித்தது.
கடந்த 1990ஆம் ஆண்டு பீகார் முதல்வராக லாலு பிரசாத் யாதவ் பதவி வகித்தபோது மாட்டுத்தீவன ஊழலில் சிக்கினார். சுமார் 950 கோடி ரூபாய் அவர் ஊழல் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது.

போலி பில்கள் கொடுத்து ஊழல்
பீகாரின் ஒரு பகுதியாக இருந்து, தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சாய்பாசா மாவட்ட கருவூலத்தில் மாட்டுத்தீவனம் தொடர்பான போலி பில்களை அளித்து ஊழலில் ஈடுபட்டதாக லாலு பிரசாத் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அப்ரூவரான ஒருவர்
இதில் லாலு பிரசாத் உள்ளிட்ட 36 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். அதில் 11 பேர் வழக்கு விசாரணையின் போதே இறந்து விட்டனர். ஒருவர் மட்டும் அரசு தரப்பு சாட்சியாக மாறி தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

இன்று என அறவிக்கப்பட்டிருந்தது
இந்நிலையில் இந்த வழக்கில் கடந்த 23ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி உள்ளிட்ட 15 பேர் குற்றவாளி தீர்ப்பளிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் 15 பேரின் தண்டனை விவரத்தை ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் இன்று வழங்கும் என்று அறிவித்திருந்தது..

நாளைக்கு தண்டனை விவரம்
இதனை முன்னிட்டு நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் தண்டனை குறித்த விவரம் நாளைக்கு அறிவிக்கப்படும் என சிபிஐ நீதிமன்றம் அறிவித்துள்ளது.

வழக்கறிஞர் உயிரிழப்பு
லாலு பிரசாத்தின் வழக்கறிஞர் வின்டேஸ்வரி பிரசாத் உயிரிழந்ததால் தண்டனை விவரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் லாலு பிரசாத்துக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் தண்டனை விவரத்தை சிபிஐ நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து லாலு பிரசாத் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications