லாலு பிரசாத் யாதவின் இளைய மகன் தேஜஸ்வி பீகார் துணை முதல்வராக அறிவிப்பு!!
பாட்னா: பீகார் மாநில துணை முதல்வராக ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் இளைய மகன் தேஜஸ்வி பிரசாத் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் அமைச்சராகியுள்ள லாலுவின் மற்றொரு மகன் தேஜ் பிரதாப் யாதவுக்கு 3 இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
பீகார் சட்டசபை தேர்தலில் வென்ற ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியது. அம்மாநில முதல்வராக ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ்குமார் இன்று பதவியேற்றார். அவருடன் சேர்த்து மொத்தம் 28 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

இவர்களுக்கான அமைச்சரவை இலாகாக்கள் ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளன. ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவின் இளைய மகன் தேஜஸ்வி துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 26. 9-ம் வகுப்பு வரை மட்டுமே படித்த தேஜஸ்வி, சிறிது காலம் கிரிக்கெட் வீரராகவும் இருந்தார்.
முதல்வர் நிதிஷ்குமார், உள்துறை உள்ளிட்ட 3 துறைகளை தம் வசம் வைத்துள்ளார். துணை முதல்வர் தேஜஸ்வி பிரசாத் யாதவுக்கு சாலை கட்டுமானம் உள்ளிட்ட இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேஜ்பிரதாப்புக்கு சுகாதாரத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் அப்துல் பாரி சித்திக் நிதி அமைச்சராகவும் பீகார் காங்கிரஸ் தலைவர் அசோக் செளத்ரி கல்வி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications